என்ஜின் கோளாறால் நடுக்காட்டில் நின்ற ஊட்டி மலை ரயில்- பயணிகள் அவதி
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேட்டுபாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பயணத்தில் காட்டு மிருகங்கள், பறவைகள், அருவிகள் ஆகியவற்றை பார்த்து ரசிக்கலாம்.
ஆனால் மலை ரயிலின் என்ஜின் பழுதடைந்து ரயில் பாதி வழியில் நின்றுவிடுவது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 7.10 மணிக்கு 150 பயணிகளுடன் மேட்டுபாளையத்தில் இருந்து ஊட்டியை நோக்கி மலை ரயில் புறப்பட்டது.
காலை 7.35 மணிக்கு மலை ரயில் கல்லாறு ரயில் நிலையத்தை அடைந்து தண்ணீர் நிரப்பிக் கொண்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ரயில் ஹில் குரோவ்- அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.
இதனால் மலை ரயில் நடுகாட்டில் நின்றது. உடனடியாக இது குறித்து மேட்டுபாளையம் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரயில் என்ஜின் பழுதடைந்து நின்ற காட்டுப் பகுதியில் யானை நாடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் பயணிகள் பயத்திலேயே இருந்தனர்.
மதியம் 1.30 மணியளவில் மேட்டுபாளையத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு அந்த ரயில் கல்லாறு ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதுவரை உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதி இல்லாமல் பயணிகள் சிரமப்பட்டனர்.
கல்லாறை அடைந்த பிறகு பயணிகள் வேன், பஸ் மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் ரயிலில் சென்று இயற்கையை ரசிக்க நினைத்த சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.