சிவகாசியில் தீபாவளிக்கு ரூ.1000 கோடி பட்டாசு விற்பனை
சிவகாசியில் 700 பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர். ஆண்டுக்காண்டு பட்டாசு தேவை அதிகரிப்பு காரணமாக இந்தாண்டும் பட்டாசு உற்பத்தி வழக்கம்போல் விறுவிறுப்புடன் நடைபெற்றது. இருந்தும் கடைசி நேரத்தில் உள்ளாட்சி தேர்தலால் தொழிலாளர்கள் பணிக்கு வராமல் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டது. தொழிலாளர்கள் பலர் உள்ளாட்சி தேர்தல் பணிக்கு சென்றுவிட்டதால் பட்டாசு ஆலைகளின் பணிகள் பாதிக்கப்பட்டன.
மேலும் வழக்கம் போல் தீபாவளி சீசன் நேரத்தில் பெய்யும் மழை இந்தாண்டு சற்று முன்பே துவங்கியதாலும், இறுதி கட்ட பட்டாசு உற்பத்தியில் தேக்க நிலை ஏற்பட்டது. அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோதனையாலும் இந்தாண்டு பட்டாசு தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டது. இருப்பினும் பட்டாசு விற்பனை குறையவில்லை.
இந்தாண்டு தீபாவளியையொட்டி சிவகாசியில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையாகியுள்ளது. குறிப்பாக பேன்ஸி ரக வெடிகள் மற்றும் சரவெடிகளுக்கு வழக்கதை விட அதிக வரவேற்பு இருந்தது. இதுபோல புஸ்வானம், சங்குசக்கரம், கம்பி மத்தாப்பு உள்ளிட்டவைகளைக்கும் பொதுமக்களிடம் அமோக வரவேற்பு இருந்தது.