சீன ஆக்கிரமிப்பு குறித்து கேட்ட இந்திய நிருபரை 'ஷட் அப்' என்று திட்டிய சீன தூதர்!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல் பிரதேசம் குறித்த தவறான வரைபடத்தை சீன நிறுவனம் ஒன்று பிரசுரித்திருப்பது குறித்து கேள்வி கேட்ட இந்திய நிருபரைப் பார்த்து ஷட்அப் என்று கோபத்துடன் சீன தூதர் ஷாங் யான் கூறியதால் இந்திய செய்தியாளர்கள் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர். டெல்லியில் வைத்து இந்த சம்பவம் நடந்ததால் இந்தியாவிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த டிபிஇஏ என்ற நிறுவனம் குஜராத் அரசுடன் வர்த்தக முதலீட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் குஜராத் அரசும், டிபிஇஏ இந்தியா நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன. மூன்று கட்டங்களாக இந்த தொழில் முதலீட்டை டிபிஇஏ நிறுவனம் செய்யவுள்ளது. இதன் மொத்த முதலீடு ரூ. 2500 கோடியாகும். முதல் கட்டமாக ரூ. 500 கோடி நேரடி முதலீட்டை இந்த நிறுவன் செய்யவுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பான விளக்கப் புத்தகம் ஒன்றை அந்த நிறுவனம் தயாரித்து செய்தி நிறுவனங்களுக்கு, செய்தி பிரசுரிப்பதற்காக அனுப்பி வைத்தது.
அந்தப் புத்தகத்தி்ல் இந்திய, சீன வரைபடம் தவறான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வரைபடத்தில் சீனா ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் மற்றும் அருணாச்சல் பிரதேச மாநில ஆகியவற்றை சீன நாட்டைச் சேர்ந்ததாகவும், முழு காஷ்மீரும் பாகி்ஸதான் நாட்டைச் சேர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், டெல்லியில், இந்திய தொழிலக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் கூட்டத்தில் இந்தியாவுக்கான சீன தூதர் யான் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்திலும் இந்த தவறான வரைபடம் அடங்கிய புத்தகத்தை டிபிஇஏ நிறுவனம் செய்தியாளர்களிடம் விநியோகித்தது.
இதைப் பார்த்த ஒரு செய்தியாளர், தூதர் யானிடம் இதுகுறித்துக் கேள்வி கேட்டார். முதலில் வரைபடம் தவறாக உள்ளதாக ஒப்புக் கொண்டார் யான். பின்னர் அருணாச்சல் பிரதேசம் சீனாவைச் சேர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதே இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என்று அந்த நிருபர் கேட்டார். தொடர்ந்து காஷ்மீர் ஆக்கிரமிப்பு, லடாக் ஆக்கிரமிப்பு குறித்தும் அவர் கேட்கவே டென்ஷனான அந்த தூதர், நிருபரைப் பார்த்த ஷட் அப் என்று கோபமாகவும், திமிராகவும் கூறினார்.
இதைக் கேட்டு செய்தியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அத்தனை பேரும் எழுந்து ஒரே குரலில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அவர்களை அமைதிப்படுத்தினார் யான். பின்னர் அவர் கூறுகையில், தவறான வரைபடம் குறித்து எங்களது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அது திருத்தப்படும். எல்லைப் பிரச்சினைகளுக்கு இந்தியாவும், சீனாவும் சுமூக தீர்வு காண முயன்று வருகின்றன என்றார்.
சீன தூதரின் இந்த திமிர்ப் பேச்சால் இந்திய செய்தியாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மத்திய அரசு சீன தூதருக்கு தனது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.