எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் தீ: 2 மணிநேரம் ரயில் தாமதம்
அரக்கோணம்: போர்பாவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இயக்கப்பட்ட வாராந்திர ரயிலில் ஏசி பெட்டியில் தீப்பிடித்ததால் 2 மணிநேரம் தாமதமாக சென்றது.
மத்திய பிரதேச மாநிலம் போர்பாவில் இருந்து கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்துக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. பல மாநிலங்களை கடந்து வரும் இந்த ரயிலில் அதிகளவில் பயணிகள் இருப்பது வழக்கம்.
இன்று அதிகாலை 3 மணியளவில் அரக்கோணத்தை அடுத்த திருவேலங்காடு வழியாக இந்த ரயில் சென்றது. அப்போது ரயிலில் இருந்த எசி பெட்டி ஒன்றில் இருந்து தீப்பொறியுடன் புகை வந்தது. இதனை கவனித்த ரயில்வே பயணிகள் ரயில் ஓட்டுநர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அந்த பெட்டியில் இருந்த 63 பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர். அதற்குள் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். பின்னர் ரயில் மெதுவாக அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு ஓட்டி செல்லப்பட்டது. தீப்பிடித்த ஏசி பெட்டிக்கு பதிலாக இன்னொரு பெட்டி மாற்றப்பட்டு, ரயில் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்றது.
ரயில் பெட்டியில் தீப்பிடித்த சம்பவத்தால் அந்த ரயில் 2 மணிநேரம் தாமதாக புரப்பட்டு சென்றது. ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.