திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம் – 600 ஜோடிகள் திருமணம்
திருப்பதி : வார விடுமுறை தினங்களை ஒட்டி திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.ஞாயிறுக்கிழமை முகூர்த்த தினம் என்பதால் 600-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.
திருமலையில் ஏழுமலை மீது எழுந்தருளியிருக்கும் ஸ்ரீனிவாசப்பெருமாளை தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். வார விடுமுறை தினமான சனி, ஞாயிறு அன்றும் அரசு விடுமுறை தினங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததை ஒட்டி வைகுண்டம் காம்ளக்சின் அனைத்து அறைகளும் நிரம்பி வழிந்தன. இதனையடுத்து மகாலகு தரிசனம் அமல்படுத்தப்பட்டது. அதில் 85 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
600 ஜோடி திருமணங்கள் ஞாயிறுக்கிழமை முகூர்த்த தினம் என்பதால் திருப்பதியில் ஏராளமான திருமணங்கள் நடந்தன. புரோகிதர் சங்கம் சார்பில் 320 திருமணங்களும் 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் பல்வேறு மண்டலங்களிலும் நடைபெற்றன. காலை முதல் இரவு வரை 600-க்கும் மேற்பட்ட புதுமண ஜோடிகள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் சிறப்பு தரிசன வரிசையில் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. மொட்டை போடும் இடம், அன்னதான கட்டிடம், லட்டு கவுண்டர் போன்ற இடங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.












Click it and Unblock the Notifications