தமிழகத்திற்கு நிதி வழங்காமல் பாரபட்சம் காட்டும் மத்திய அரசுக்கு தமிழக பாஜக கண்டனம்
சென்னை: மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு காங்கிரஸ் அரசு அல்லாத மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். குஜராத், தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்றும் அவர் புகார் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், விலைவாசி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக பாரதீய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதனை தொடங்கி வைத்து தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:
மத்திய அரசு பாரபட்சம்
விலைவாசி உயர்வு மூலம் அன்றாட வாழ்க்கையில் சாதாரண மக்கள் மீது பெரும் சுமை சுமத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி சுமைகளை மாநில அரசு மீது சுமத்தியதால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆனால் இதில் பாதிக்கப்படுவது சாதாரண பாமர மக்கள் தான். எனவே மாநில அரசு நிதி சுமையை மக்கள் மீது சுமத்தாமல் வேறு வழிகளில் நிதியை பெருக்க வேண்டும்.
பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்கள் மற்றும் காங்கிரஸ் அரசு இல்லாத மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. மத்திய அரசின் இந்த போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதன் காரணமாகத்தான் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம், பால்விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது. எனவே தற்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.