For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா!

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: முல்லைப் பெரியாறு அணை முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அரசியல் ஆதாயத்திற்காக அணை பாதுகாப்பற்றது என்று கேரள அரசு பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

இந்த அணை விவகாரம் தொடர்பாக இன்று தமிழக சட்டசபையில் சிறப்புத் தீர்மானத்தை முன்மொழிந்து அவர் பேசுகையில்,

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை தொடர்பாக, கேரள அரசு அம்மாநில மக்களின் உணர்ச்சிகளை தூண்டி வரும் சூழ்நிலையில், கேரள அரசின் உண்மையற்ற பிரச்சாரத்தின் அடிப்படையில், தமிழக உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதை நாம் அனைவரும் ஒன்றுபட்டு தெரிவிக்கும் வகையில் இன்று இந்த சட்டமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும், ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை முற்றிலும் பாதுகாப்பான அணை என்பதை முதற்கண் தெரிவித்துக் கொண்டு அது குறித்த சில விவரங்களை எடுத்துக் கூற விரும்புகிறேன்.

முல்லைப் பெரியாறு அணை புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் 1886லிருந்து 1895 வரையிலான ஆண்டுகளில், சுண்ணாம்பு சுர்க்கி கலவையால் கருங்கல்லில் கட்டப்பட்டதாகும். பொதுவாகவே, புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்படும் அணைகள் நீர் அழுத்தம், அலைகளால் ஏற்படும் அழுத்தம், நில அதிர்வுகளினால் ஏற்படும் விசை போன்றவற்றை தனது பளுவினால் தாங்கிக் கொள்ளும் சக்தி வாய்ந்தவை. எனவே தான், புவி ஈர்ப்பு அடிப்படையில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை இன்றளவும் உறுதியாகவும், வலிமை மிக்கதாகவும் விளங்குகிறது.

பெரியாறு திட்டத்தின் கீழ், சென்னை மாகாணத்திற்கு தண்ணீரை திருப்பும் வகையில் திருவாங்கூர் மகாராஜாவுக்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையே 1.1.1886 முதல் 999 ஆண்டுகளுக்கான பெரியாறு குத்தகை உடன்படிக்கை, 29.10.1886 அன்று ஏற்பட்டது.

ஒரு ஏக்கர் நிலத்திற்கு, 5 ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில், சுமார் 8,000 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. இந்த அணையின் நீர் மூலம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள சுமார் 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந் நிலையில், 29.5.1970 அன்று கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே இரண்டு துணை ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. அதாவது, 1) 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குத்தகை வாடகை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், ஒரு ஏக்கருக்கான, ஆண்டு குத்தகை வாடகையை 5 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்த்துதல், மற்றும் மீன்பிடி உரிமையை கேரளாவிற்கு விட்டுக் கொடுத்தல் ஆகியவை அடங்கிய ஓர் ஒப்பந்தமும்,

2) மின் உற்பத்தி திறனுக்கு ஏற்ப கட்டணம் செலுத்துவதன் அடிப்படையில், புனல் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள தமிழ்நாட்டை அனுமதிப்பது என்கிற மற்றொரு ஒப்பந்தமும் ஏற்பட்டன.

இந்த இரண்டு ஒப்பந்தங்களும், 1886ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அசல் உடன்படிக்கையின் உரிமையாளர் என்ற முறையில் ஏற்படுத்தப்பட்டன.

இது போன்ற அணைகள் வலுப்படுத்தப்பட்டதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகள் உலக அளவில் உள்ளன. 1911ம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாநிலத்தில் கட்டப்பட்ட ரூஸ்வெல்ட் அணை வலுப்படுத்தப்பட்டு, அதனுடைய கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது. 1905ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் கட்டப்பட்ட ஜோக்ஸ் அணை வலுப்படுத்தப்பட்டு 1952ம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. இதே போன்று, இங்கிலாந்து நாட்டில் உள்ள மேல் கிளன்டோவல் என்ற புவி ஈர்ப்பு விசை கொண்ட அணையும் வலுப்படுத்தப்பட்டது.

இதே போன்று, முல்லைப் பெரியாறு அணையிலும், மத்திய நீர் ஆணையத் தலைவரின் பரிந்துரைகளின் அடிப்படையில், 1980 முதல் 1994 வரை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பழைய அணையில், அணையின் முன் மற்றும் பின் பக்க பகுதிகள் சுண்ணாம்பு சுர்க்கி கலவையால் கருங்கற்கள், அதாவது, stone masonry with lime surkhi mortar கொண்டு கட்டப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், அணையின் மையப் பகுதி சுண்ணாம்பு சுர்க்கி திண்காரையால், அதாவது, lime surkhi concrete-ஆல் கட்டப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில், எவ்வாறு வலுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளக்கிக் கூறுவது எனது கடமை என்றே கருதுகிறேன்.

குறுகிய கால திட்டமாக, அணையின் எடையை அதிகரிக்கும் பொருட்டு, 21 அடி அகலத்திற்கு, மூன்று அடி பருமன் கொண்ட ஆர்.சி.சி. கட்டுமானப் பணி அணையின் முழு நீளத்திற்கு அதன் மேல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, அணையின் எடை ஒரு மீட்டருக்கு 35 டன் அதிகரித்துள்ளது. அதாவது, அதன் கட்டமைப்புடன் மொத்தம் 12,000 டன் எடை கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது. நடுத்தர கால நடவடிக்கையாக, இறுக்கு விசை தொழில்நுட்பத்தின் அடிப்படையில், அணையின் அடித்தளத்துடன் எஃகு கம்பிகள் இழுத்து கட்டப்பட்டுள்ளன. அணையின் முன் பகுதியிலிருந்து 5 அடி தொலைவில், அணையின் மேற்பரப்பிலிருந்து, அடித்தளப் பாறையில் 30 அடி வரை, 9 அடி இடைவெளியில், 4 அங்குலம் குறுக்களவில், துளைகள் அணையின் முழு நீளத்திற்கும் போடப்பட்டுள்ளன.

இந்த துளைகளுக்குள், 7 மி.மீ. பருமன் கொண்ட மிக வலுவான 34 எஃகு கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. அஸ்திவாரத்தில் உள்ள கருங்கல் பாறைகளுடன், இந்த கம்பிகள் உறுதியாக பொருத்தப்பட்டுள்ளன. முதலில் 20 அடி ஆழத்திற்கு திண்காரைக் கட்டுகள், அதாவது, Concrete போடப்பட்ட பிறகு கம்பிகள் செலுத்தப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. 120 டன் சக்தி கொண்ட இக்கம்பிகள், மேற்பரப்பிலிருந்து இழுத்துக் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், துளையை அடைக்கும் வகையில், சிமிட்டிக் கலவை போடப்பட்டு மேற்பரப்பு மூடப்பட்டது. இதன் காரணமாக, அஸ்திவார பாறைகளுடன் 120 டன் விசை கொண்டு, அணையை வலுவாக இறுக்குக் கம்பிகள் பிடித்துக் கொள்ளும். நில அதிர்வு உட்பட பல்வேறு விசைகளைத் தாங்கிக் கொள்ளும் வகையில், அணையின் முழு நீளத்திற்கும், 9 அடி இடைவெளியில், 95 கம்பிகள் செலுத்தப்பட்டு சிமிட்டிக் கலவை போடப்பட்டு இருக்கிறது.

நீண்ட கால நடவடிக்கையாக, அணையின் பின்புறத்தில் 10 அடி ஆழம், 32 அடி அகலத்திற்கு, தரை மட்டத்திலிருந்து 145 அடி உயரத்திற்கு ஆர்.சி.சி. கட்டுமானம் அணையின் தலைப் பகுதியுடன் இணையும் வகையில், மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தற்போதுள்ள அணை மற்றும் புதிய கட்டுமானம் ஆகியவை ஒரே அணை போல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

English summary
Tamil Nadu Chief Minister Jayalalithaa today charged Kerala government with carrying out a "mischievous propaganda" on the safety of the Mullaperiyar Dam only to create panic and whip up emotions of its people to draw political mileage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X