ஏவுதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு: பிரித்வி II ஏவுகணை சோதனை ஒத்திவைப்பு
பலசூர்: ஏவுதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இன்று நடக்கவிருந்த பிரித்வி II ஏவுகணையின் இரட்டை சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒரிசா மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள சண்டிப்பூர் பாதுகாப்புத் தளத்தில் இருந்து இன்று பிரித்வி II ஏவுகணை இரட்டைப் பரிசோதனை செய்யப்படவிருந்தது. ஆனால் ஏவுதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இன்று 2 ஏவுகணைகள் பரிசோதிப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சண்டிப்பூர் பாதுகாப்புத் தள தலைவர் எஸ்பி தாஷ் கூறியதாவது,
ஏவுதளத்தில் திடீர் என்று தொழில்நுடபக் கோளாறு ஏற்பட்டதால் பரிசோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோளாறை சரி செய்த பிறகு தான் அடுத்த பரிசோதனை தேதி அறிவிக்கப்படும். இரட்டைப் பரிசோதனையின்போது இரண்டு ஏவுகணைகள் செயலிழந்தன என்று ஊடகங்களில் செய்து வந்துள்ளது. எந்த அடிப்படையில் சோதனை தோல்வியடைந்தது என்று கூறினார்கள் என்பதே தெரியவில்லை என்றார்.
தரையில் இருந்து தரையைத் தாக்கும் இரண்டு பிரித்வி II ஏவுகணைகள் இன்று பரிசோதிக்கப்படுவதாக இருந்தது. 9 மீட்டர் நீளம் கொண்ட அது சுமார் 500 கிலோ எடை கொண்ட ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் தன்மை உடையது. கடந்த செப்டம்பர் மாதம் சண்டிப்பூர் தளத்தில் இருந்து பிரித்வி II ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.