வெளிநாட்டு வேலை ஆசைகாட்டி பல லட்சம் மோசடி: ஒருவர் கைது
திருவனந்தபுரம்: வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள வஞ்சியூரைச் சேர்ந்தவர் அலி அக்பர். வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கேரளா மற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர்களிடம் வெளிநாட்டு வேலை ஆசை காட்டி அலி அக்பர் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டார். குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் வழங்கிய விசா மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்றவர்களுக்கு அது போலி விசா என்பது தெரிய வந்தது.
இதனால் அவர்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டனர். ஆனால் அலி அக்பர் பணத்தைக் கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டார். இதையடுதது திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கொல்லம் அருகே உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அலி அக்பரை பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது கேரளம் மட்டுமல்லாமல் குமரி மாவட்டத்திலும் பல வாலிபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
அலி அக்பரை கைது செய்த போலீசார் அவரை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.