சல்மான் குர்ஷித் மீது குடியரசுத் தலைவரிடம் தேர்தல் ஆணையம் புகார்
டெல்லி: தேர்தல் நடத்தை விதிகளை தொடர்ந்து சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மீறி வருவதாக குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலுக்கு தேர்தல் ஆணையம் புகார் மனு அளித்துள்ளது.
உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் தொடர்பாக சல்மான் குர்ஷித் பேசினார்.
சட்ட அமைச்சராக இருந்து கொண்டு சல்மான் குர்ஷித் இத்தகைய அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகவும் இனி அத்தகைய மீறல்களை அவர் செய்ய மாட்டார் என்று தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்திருந்தது.
ஆனால் தேர்தல் ஆணையம் என்னை தூக்கில் போட்டாலும் தொடர்ந்து சிறுபான்மையினர் உரிமைக்காக குரல் கொடுப்பேன் என்று சல்மான் குர்ஷித் கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா கட்சி புகார் அளித்தது.
மேலும் உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும்வரை குர்ஷித் உள்ளே நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியது.
அரசியல்சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் சல்மான் குர்ஷித்தை சட்ட அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் மன்மோகன்சிங் நீக்க வேண்டும் என்றும் பாஜக கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை சல்மான் குர்ஷித் தொடர்ந்து மீறி வருவது குறித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.
அந்த கடிதத்தில், தேர்தல் நடத்தை விதிகளுக்கு சல்மான் குர்ஷித் பணிய மறுப்பதாகவும், அவருடைய பேச்சின் தொனி தேர்தல் ஆணையத்தின் சட்டபூர்வ உத்தரவை அவமதிப்பாக உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
சல்மான் குர்ஷித் மீது குடியரசுத் தலைவர் உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ள தேர்தல் ஆணையம், குர்ஷித்தின் முறையற்ற நடவடிக்கை, அரசியல் சட்ட அதிகார அமைப்புகளுக்கு இடையேயான பணியில் ஊறு விளைவிப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளது.
சல்மான் குர்ஷித் மீது மேற்கொள்ள இருக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தேர்தல் ஆணையம் வரும் திங்கள்கிழமை முடிவு செய்யும் என்று தெரிகிறது.