கூடங்குளம் விவகாரத்தில் வெளிநாட்டு சதி, சொல்கிறார் சு. சாமி
மதுரை: கூடங்குளம் அணு உலையை செயல்படாமல் தடுப்பதில் வெளிநாட்டுச் சதி உள்ளது என்று தாம் கூறிவந்ததை மத்திய அரசு தற்போது ஒப்புக் கொண்டிருக்கிறது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏலமுறைகளை முறையாகப் பின்பற்றி இருந்தால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும்.
முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று கூறி, ஊழல் செய்துள்ளனர். இந்த ஊழல் பணத்தில் சிலருக்குப் பங்கு சென்றுள்ளது. அவர்கள் அனைவரும் நீதிமன்றத்திற்கு நிச்சயம் வந்தாக வேண்டும்..
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை, தமிழக அரசு செயல்படுத்தவில்லை.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படாமல் தடுப்பதில் வெளிநாட்டு சதி உள்ளது என்பதை நான்முன்பே கூறியிருந்தேன். அதை, இப்போதுதான் மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இப் பிரச்னையில், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, அணுமின் நிலையத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.