கர்நாடக வனப்பகுதியில் முகாமிட்டுள்ள தமிழக நக்சலைட்டுகள்-போலீஸ்
பெங்களூர்: தமிழ்நாட்டைச் சேர்ந்த நக்சலைட்டுகள் தற்போது கர்நாடக எல்லைப் பகுதிகளில் முகாமிட்டிருப்பதை கர்நாடக நக்சலைட் எதிர்ப்புப் படை உறுதி செய்திருக்கிறது.
இது தொடர்பாக நக்சலைட் எதிர்ப்புப் படை அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டைச் சேர்ந்த நக்சலைட்டுகள் கர்நாடக எல்லைப் பகுதிகளில் முகாமிட்டிருப்பதை அண்மைய சோதனை நடவடிக்கைகளில் உறுதி செய்தோம்.
சிக்மகளூரில் நக்சலைட்டுகளுக்கும் எமது படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. அந்த இடத்தில் தமிழ் நாளிதழ்கள் சிலவற்றை கைப்பற்றினோம்.
அதேபோல் தமிழில் எழுதப்பட்ட பல குறிப்புகளும் சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இதை வைத்து கர்நாடகத்தில் தாக்குதல் நடத்த ஏதேனும் திட்டம் தீட்டியிருக்கின்றனரனா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். 2007-ம் ஆண்டு கர்நாடகத்தில் இருந்த நக்சல்களின் எண்ணிக்கை அனேகமாக சற்று கூடியிருக்கலாம்.
குதிரைமொக்கு புலிகள் சரணாலயப் பகுதியில் புதிய நக்சல் தலைவரான கிருஷ்ணமூர்த்தி ஆதிவாசிகளை அந்த இயக்கத்தில் சேர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். கர்நாடகத்தின் காபி தோட்டங்களில் பணியாளர்களாக நக்சலைட்டுகள் சேர்ந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறோம். இருப்பினும் சத்தீஸ்கர் மாநிலத்தைப் போன்ற சம்பவங்க்ள் இங்கு நடக்க வாய்ப்பில்லை. எங்களது ரோந்து பணியை தீவிரப்படுத்திவருகிறோம் என்றார் அவர்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடக ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதியில் நக்சலைட்டுகள் முகாமிட்டிருப்பதாக அண்மையில் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் கர்நாட்கா நக்சலைட் எதிர்ப்புப் படை இதை உறுதி செய்திருக்கிறது.