வலுவடைகிறது தென் மேற்குப் பருவ மழை- தமிழகத்திலும் கன மழை பெய்யும்
பெங்களூர்: தென் மேற்குப் பருவ மழை வலுவடைய ஆரம்பித்துள்ளது. இதனால் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தென் மேற்குப் பருவ மழை மேலும் வலுவடையும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
கிழக்கு மத்திய அரபிக் கடலில் நேற்று ஒரு வலுவான காற்றழுத்தம் உருவாகியு்ளது. இதனால் கடும் காற்று வீச ஆரம்பித்துள்ளது. இது பருவ மழையை மேலும் வலுப்படுத்த உதவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று நாட்ளில் இந்த காற்றழுத்தமானது மேலும் வலுவடைந்து, கடலோரக் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நல்ல மழையைக் கொண்டு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு கடலோரம் முழுவதும், கொங்கன் கடலோரப் பகுதிகளிலும் கன மழையைக் கொண்டு வரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டியுள்ள பகுதிகளிலும், புதுச்சேரியிலும் அடுத்த 3 நாட்களில் மழை பெய்யும் என்றும் அடுத்த ஒரு வாரத்திற்கு இது நீடிக்கும் என்றும் வானிலைஆய்வு மையம் தெரிவிக்கிறது.
ஜூன் 15ல் மும்பையில் மழை தொடங்கும்
இதற்கிடையே மும்பையில் தென் மேற்குப் பருவ மழை ஜூன் 15ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அங்கு ஜூன் 10ம் தேதி மழை தொடங்கும். இருப்பினும் இந்த ஆண்டு ஐந்து நாட்கள் மழை தாமதமாகியுள்ளது.
அதேபோல டெல்லியிலும் மழை தொடங்குவது தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.