டியூஷன் டீச்சர் மகளுடன் காதல்: மாயமான +1 மாணவன் மர்மச் சாவு
சென்னை: ஓசூரில் டியூஷன் டீச்சர் மகளை காதலித்த பிளஸ் 1 மாணவன் திடீர் என்று மாயமானார். தற்போது அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டபள்ளியைச் சேர்ந்த சுஷில் மண்டல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பபதாவது,
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நான் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். எனக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்தவன் சந்தேஷ். 10ம் வகுப்பில் 84 சதவீத மதிப்பெண் எடுத்துள்ள அவன், அங்குள்ள மகாரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பிளஸ்1 படிக்கிறான்.
15.10.11 அன்று வீட்டிலிருந்து கடைக்குச் சென்றவன் பின்னர் வீடு திரும்பவில்லை. எனவே சிப்காட் போலீசில் புகார் செய்தேன். மாணவன் மாயம் என்ற வழக்கைப் பதிவு செய்துவிட்டு அப்படியே விட்டுவிட்டனர். பின்னர் நானே சென்று அவனது நண்பர்கள், உடன் படிக்கும் மாணவர்களிடம் விசாரித்தேன்.
அவனும், ஓசூர் ராஜாஜி நகரைச் சேர்ந்த அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற அதே பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவியும் ஆழமாக காதலில் இருந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. அவரது தந்தை மத்திய அரசு பணியில் பெரிய அதிகாரியாக இருக்கிறார்.
டியூசன் படிப்பதற்காக அனிதாவின் வீட்டுக்கு சந்தேஷ் கடந்த 2 ஆண்டுகளாக சென்றான். அனிதாவின் தாயார் அவனுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்து வந்தார். அப்போது தான் அவர்களுக்குள் காதல் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு புகைப்படங்கள், காதல் கடிதங்கள் ஆதாரமாக உள்ளன. தனது தந்தை தான் சந்தேஷை ஏதாவது செய்திருக்க வேண்டும் என்று அனிதா கூறினாள். இதுபற்றி தெரிவித்தும் அனிதாவின் தந்தையை போலீசார் விசாரிக்கவில்லை.
அனிதாவின் தந்தைதான் எனது மகனை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாக தெரிகிறது. அவனது உயிருக்கு ஆபத்து உள்ளது. அதிகாரமிக்க பதவியில் இருப்பதால் அவரை அணுக முடியவில்லை. எனவே நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாயமான மாணவனைத் தேடுவது குறித்த அறிக்கையை கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. நீதிமன்றத்தில் தாக்க செய்ய வேண்டும் எந்று உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணகிரி எஸ்.பி. அபிஷேக் தீஷித் சார்பில் அரசு வழக்கறிஞர் பி. கோவிந்தராஜன் ஆஜரானார்.
அப்போது அவர் வாதாடியதாவது,
மாயமான மாணவனின் மண்டை ஓடு கிடைத்துள்ளது. இதனால் மாணவன் மாயம் என்ற வழக்கு மாணவன் மர்மச்சாவு என்று மாற்றப்பட்டுள்ளது. மண்டை ஓட்டை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி சில தகவல்களை பெற வேண்டியுள்ளது. அந்த அறிக்கை வந்த பிறகு தான் மாணவனின் சாவு கொலையா, தற்கொலையா என்பது தெரிய வரும். அதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் வழக்கை தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இதையடுத்து வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.