இங்கிலாந்து பிரதமரை திட்டி, வரிசையில் நிற்க வைத்த வெயிட்ரஸ்
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பிளைமவுத்தில் நடந்த ஆயுதப்படை தின விழாவில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு காபி கடை அருகே காரை நிறுத்தி காபி வாங்கச் சென்றார். கடைக்குள் சென்று காபி கேட்ட கேமரூனை அங்கு வேலைப் பார்க்கும் பெண் ஷீலா தாமஸ் அவர் பிரதமர் என்பது தெரியாமல் அவரிடம் நான் பிசியாக இருப்பது தெரியவில்லையா, வரிசையில் நில்லுங்கள் என்று திட்டினார். இதையடுத்து கேமரூன் வரிசையில் நின்றார். பிறகு கடைக்கு வெளியே வந்து நின்று கொண்டிருந்தார்.
அதற்குள் அவருடன் வந்த பாதுகாவலர்கள் வேறொரு கடையில் இருந்து டீ வாங்கிக் கொண்டு வந்து கேமரூனுக்கு கொடுத்தனர். அப்போது அந்த வழியாகச் சென்றவர்கள் ஆஹா, பிரதமர் இங்கு வந்து டீ குடிக்கிறாரே என்று அவரை மரியாதையுடன் பார்த்துச் சென்றனர். அதன் பிறகு கேமரூன் மீண்டும் கடைக்குள் சென்றார். ஆனால் அவர் வேறு கடையில் டீ வாங்கிக் குடிப்பதைப் பார்த்த ஷீலா தன் கடையில் ஏன் வாங்கவில்லை என்று அவரை மீண்டும் திட்டினார்.
இது குறித்து ஷீலா கூறுகையில்,
முதலில் என் கடைக்கு வந்திருப்பவர் கேமரூன் தான் என்று எனக்கு தெரியவில்லை. நான் வேறு ஒருவருக்கு உணவுப் பொருட்கள் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அதனால் நான் அவரை கவனிக்கவில்லை. பார்சல் காபி கிடைக்குமா என்று கேமரூன் கேட்டார். அதற்கு நான், வேறு ஒருவருக்கு சர்வ் செய்து கொண்டிருக்கிறேன் என்றேன். உடனே அவர் சாரி சொன்னார். அதன் பிறகே அவர் பிரதமர் என்பதை எனக்கு சிலர் தெரிவித்தனர்.
கேமரூனை வெயிட்ரஸ் ஒருவர் அடையாளம் தெரியாமல் பேசியது இது ஒன்றும் முதல் தடவை இல்லை. ஏற்கனவே அவர் குடும்பத்துடன் டஸ்கனியில் விடுமுறையைக் கொண்டாடச் சென்றபோது அங்கு ஒரு உணவகத்தில் வேலை பார்க்கும் பெண் நான் பிசியாக இருக்கிறேன், நீங்களே உங்கள் பானங்களை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.