சத்துணவு பணியாளர்கள் நியமனம்: சிபாரிசு கடிதங்களை கடாசும் கலெக்டர் நந்தகுமார்
ராமநாதபரம்: சத்துணவு பணியாளர்கள் பணி நியமணத்தில் அரசியல்வாதிகளின் சிபாரிசு கடிதங்களைக் கொண்டு வரும் விண்ணப்பதாரர்களை கறுப்புப் பட்டியலில் வைக்க ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவுப் பணியாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணிக்கு ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளது என்று கூறப்படுகின்றது. இதில் எப்படியும் பணம் பார்த்துவிட வேண்டும் என துடித்த ஆளும் கட்சி நிர்வாகிகள் பலர், பயனாளிகள் மிகவும் ஏழ்மையானவர், சாப்பாட்டிற்குக் கூட வழி இல்லாதவர், பழைய கட்சி நிர்வாகி மகன், மகள் எனக் கூறி சம்பந்தப்பட்ட அமைச்சர், மாவட்டத்தில் உள்ள தொகுதிக்கு உட்பட்ட எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகளிடம், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அந்தப் பணியிடங்களை ஒதுக்கித் தர வேண்டும் எனச் சிபாரிசு கடிதம் வாங்கிவிட்டார்களாம்.
இதை கொடுத்தால் எப்படியும் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் பணி வழங்கிவிடுவார் என்று கணக்கு போட்டு அந்த சிபாரிசு கடிதங்களை கலெக்டரிடம் கொடுத்துள்னர். இந்த நிலையில் கலெக்டர் நந்தகுமார் அதிகாரிகள் அடங்கிய பல குழுக்களை அமைத்து விதவைகள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் என அரசு விதிப்படி முன்னுரிமை அளித்து 462 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
கல்வி தகுதி, வயது, திருமணம், குழந்தைகள் போன்ற பல தகுதிகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்களாம். அரசியல்வாதிகள் சிபாரிசுகளைக் கொண்டு வரும் விண்ணப்பதாரர்களை கறுப்புப் பட்டியலில் வைக்க நந்தகுமார் உத்தரவிட்டுள்ளாராம். இதனால் உற்சாகமான அதிகாரிகள் தகுதியானவர்களை உடனே தேர்வு செய்துவிட வேண்டும் என அதிவேகம் காட்டி வருகின்றார்களாம்.
நந்தகுமாரின் நேர்மையான நடவடிக்கையால் மகிழ்ந்துபோன பொது மக்கள் அவரை மனதாரப் பாராட்டி வருகின்றனர். நேர்மையான வழியில் செல்லும் நந்தகுமார் சாதனை படைப்பார் என்றாலும், அவர் ஆட்சியாளர்களின் சோதனைக்கும், கோபத்திற்கும் ஆளாக நேரிடுமோ என்று பொதுமக்கள் ஒரு புறம் அச்சம் தெரிவித்துள்ளனர்.