கனமழை: கபினி அணையிலிருந்து காவிரி நீர் திறப்பு.. நாளை இரவு மேட்டூர் வரும்
பெங்களூர்: கர்நாடகத்திலும் கேரளத்தின் வயநாடு பகுதியிலும் கன மழை பெய்து வருவதையடுத்து கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது.
இதையடுத்து அணையைப் பாதுகாப்பதற்காக கர்நாடக அரசு அணையிலிருந்து நீரைத் திறந்துவிட்டுள்ளது. வினாடிக்கு 15,000 கன அடி உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த நீர் நாளை இரவு மேட்டூர் அணையை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73 அடியாக உள்ளது.
ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை:
கபினி அணை நிரம்ப இன்னும் 2 அடி மட்டுமே உள்ளதால் கபினி ஆற்றங்கரையோரம் வாழும் மகக்ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதே போன்று காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 124 அடியில் 86.50 அடி வரை தண்ணீர் உள்ளது. அதுவும் நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.