ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட ஜேப்பியார்
சென்னையை அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள இந்தக் கல்லூரியின் கூடைப்பந்து உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை கட்டடத்தின் தூண் சரிந்து விழுந்ததில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 50 வட மாநிலத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதில் ஒடிஸ்ஸா, அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் 6 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலியாயினர்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கட்டடப் பொறியாளர்கள் ராஜ்குமார், அன்புரோஸ், மேஸ்திரி சதானந்தம், கல்லூரியின் இயக்குனரும் ஜேப்பியார் மருமகனுமான மரியவில்சன் ஆகிய 4 பேரை கைது செய்யது வேலூர் சிறையில் அடைத்தனர்.
அதே போல ஜேப்பியார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்தார். பயணம் செய்யும் நிலையில் ஜேப்பியாரின் உடல்நிலை இல்லை என்று டாக்டர்கள் கூறியதால், ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் அப்துல் மாலிக் மருத்துவமனைக்கே சென்றார். அவர் முன் ஜேப்பியார் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
ஆனாலும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறவும் மாஜிஸ்திரேட் அனுமதித்தார்.
இந்நிலையில் நேற்று மாலை காஞ்சிபுரம் எஸ்.பி. மனோகரன் தலைமையிலான போலீஸ் படை ஆம்புலன்சுடன் மருத்துவமனைக்கு வந்து ஜேப்பியாரை வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். இரவு 7.30 மணிக்கு அவர் வேலூர் சிறைக்கு ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டார்.
சிறை வாயிலில் வாகனம் நின்றது. அப்போது ஜேப்பியார் தன்னால் நடந்து செல்ல முடியாது ஸ்டிரெச்சர் வேண்டும் என்று கூறினார். இதற்கு சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் வீல் சேராவது வேண்டும் என்றார். அதற்கு விதிமுறைகள் இடம் பெறாது என்று சிறை அதிகாரிகள் கூறிவிட்டனர்.
இதையடுத்து ஆம்புலன்சில் இருந்து ஜேப்பியார் இறங்கி நடந்து சென்றார். வேலூர் ஜெயிலில் விசாரணை கைதிகள் இருக்கும் சாதாரண பிரிவில் ஜேப்பியார் அடைக்கப்பட்டார்.
இன்று காலை சிறையில் உள்ள மருத்துவமனைக்கு ஜேப்பியார் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்தனர்.
விபத்தின் மூலம் உயிர் இழப்பை ஏற்படுத்தியது, உயிர் இழப்புக்கு துணைபோனது என இரு பிரிவுகளில் ஜேப்பியார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எம்ஜிஆருக்கு மிக நெருக்கமானவராக இருந்த ஜேப்பியார் சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் உள்ளார்.