பாக். இந்துக்கள் குறை கேட்க 3 எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அமைத்த ஆசி்ப் அலி சர்தாரி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் வாழும் இந்துக்களின் குறைகளை கேட்டறிய 3 அமைச்சர்கள் அடங்கிய குழுவை அந்நாட்டு அதிபர் சர்தாரி அமைத்துள்ளார்.
பாகிஸ்தானின் சிந்த மகாணாத்தில் வாழும் இந்துக்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அஞ்சுகின்றனர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி ஜாகோபாத்தைச் சேர்ந்த மனிஷா குமாரி என்ற இளம் பெண் கடத்தப்பட்டார். இதையடுத்து அவர்களின் பயம் இன்னும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் வாழும் சுமார் 250 பேர் புனித யாத்திரை செல்ல இந்தியா கிளம்பினர்.
அவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருக்க பயந்துபோய் இந்தியாவுக்கு செல்வதாகவும், இனி அங்கு திரும்பிச் செல்லும் எண்ணம் இல்லை என்றும் செய்தி வெளியாகின. இதனால் அவர்களை வாகா எல்லையில் சுமார் 7 மணிநேரம் பிடித்து வைத்திருந்தனர். அதன் பிறகே அவர்கள் இந்திய எல்லைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இது அனைத்து செய்தித்தாள்களிலும் வந்தன.
இதையடுத்து சிந்த் மாகாணத்தில் வாழும் இந்துக்களை சந்தித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பாகிஸ்தான் அதிபர் சர்தாரி 3 எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவில் ஹரி ராம், லால் சந்த் மற்றும் மௌலா பக்ஷ் சாந்தியோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் சிந்த் மகாணத்தில் உள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு அங்குள்ள அதிகாரிகளுக்கு சர்தாரி உத்தரவிட்டுள்ளார்.