நாளை தேமுதிகவுக்கு வயசு 8: வறுமையை ஒழிக்க விஜயகாந்த் சூளுரை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தேமுதிக அரசியல் பொது வாழ்வில் அடியெடுத்து வைத்து தனது 7வது ஆண்டை நிறைவு செய்து 8வது ஆண்டை தொடங்குகிறது. நாம் நடந்து வந்த பாதை மேடு பள்ளங்களை கொண்டது என்றாலும், பல்வேறு அரசியல் சூழ்ச்சிகள் பல நேரங்களில் நம்மை காலை வாரி விட முயன்றாலும் அவற்றை எல்லாம் கடந்து இன்றைய தினம் தமிழ்நாட்டு மக்களின் நன் மதிப்பை பெற்ற எதிர்க்கட்சியாக விளங்குகிறோம்.
மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் மூலம் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டபோது பொதுமக்கள் சார்பில் எதிர்த்து போராடிய வரலாறு தேமுதிகவிற்கு உண்டு. ஆகவே தேமுதிக என்றும் மக்கள் பக்கம் இருந்து வருகிறது என்பதற்கு இவையே போதுமான சான்றுகளாகும்.
சாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவாக ஆக்கப்பூர்வமாக இயங்கி வரும் தேமுதிக தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியலை மட்டுமல்ல, அரசியலில் ஒரு புதிய பாதையையும் வகுத்து வருகிறது.
இந்த இயக்கம் நாளை (வெள்ளிக்கிழமை) தனது 8வது ஆண்டினை தொடங்குகிற நேரத்தில், எவ்வாறு இதுவரையில் ஓயாது, ஒழியாது கழக தோழர்கள் தங்கள் உழைப்பையும், உடைமைகளையும் ஈடுபடுத்தி வருகின்றனரோ, அதே போல மேலும் நம் மக்கள் பணி தொடரும் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேமுதிகவினர் கழக கொடியை ஏற்றியும், இனிப்புகளை வழங்கியும், ஏழைகளுக்கு நலப்பணிகள் செய்தும், கூட்டங்கள் நடத்தியும், கொள்கைகளை விளக்கியும் கழகத்தின் தொடக்க நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். ஏழைகளே இல்லாத நாடு என்ற நிலையை நம் நாடு எட்டிட அயராது பாடுபடுவோம் என்று இந்த நேரத்தில் சூளுரை மேற்கொள்வோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.