ஹரியானா காங். அரசு- டி.எல்.எப்.- வத்ரா இடையேயான தொடர்புகளை அம்லப்படுத்தினார் அர்விந்த் கெஜ்ரிவால்
சோனியா காந்தியின் மருமகனான வத்ரா மீது அர்விந்த் கெஜ்ரிவால் குழுவினர் சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக புகார் தெரிவித்திருந்தனர். இதற்கு சோனியா காந்தியும் , காங்கிரஸ் அமைச்சர்களும் பதில் கூறுவதாக நினைத்து வத்ராவுக்கு வக்காலத்து வாங்கினர். வத்ராவும் தாம் நிரபராதி என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலடியாக விரிவான ஆதாரங்களை இன்று வெளியிடப் போவதாக கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
அறிவித்தபடி டெல்லியில் செய்தியாளர்களிடம் வத்ரா மீதான அடுக்கடுக்கான புகார்களை இன்று கெஜ்ரிவால் வெளியிட்டார். ஹரியானாவின் ஆளும் காங்கிரஸ் அரசு டி.எல்.எப். என்ற நிறுவனத்துக்காக எப்படியெல்லாம் சாதகமாக நடந்து கொண்டது என்பது பற்றியும் சர்ச்சைக்குரிய டி.எல்.எப். நிறுவனத்துக்கும் வத்ராவுக்கும் இடையேயான தொடர்பு பற்றியும் கெஜ்ரிவால் விவரித்தார்.
கெஜ்ரிவால் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டுகள் விவரம்
குற்றச்சாட்டு 1: ஹரியான மாநிலம் குர்கானில் அரசு மருத்துவமனை கட்டுவதற்காக 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு என்று கையகப்படுத்த இந்த நிலத்தை டி.எல்.எப். நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறது ஹரியானா அரசு. அரசிடமிருந்து பெற்ற அரசு மருத்துவமனைக்கான நிலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றை அமைக்கிறது டி.எல்.எப். நிறுவனம். இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஒரு ஆண்டுக்குள் 50 விழுக்காடு பங்குகளை வாங்கிவிடுகிறார் சோனியாவின் மருமகன் வத்ரா. அப்படி வாங்கிய வத்ரா பின்னர் தமது பங்குகளை மீண்டும் டி.எல்.எப். நிறுவனத்த்க்கே விற்பனை செய்திருக்கிறார். அரசு மருத்துவமனைக்கான நிலத்தை டி.எல்.எப். நிறுவனத்துக்கு ஹரியானா காங்கிரஸ் அரசு ஏன் ஒதுக்கியது? டி.எல்.எப். அமைத்த சிறப்பு பொருளாதார மண்டத்தில் 50 விழுக்காடு பங்குகளை எப்படி வத்ரா வாங்கினார்? அப்படி வாங்கிய பங்குகளை வத்ரா மீண்டும் டி.எல்.எப். விற்றது ஏன்?
குற்றச்சாட்டு 2: ஹரியானா மாநில அரசு 350 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தொழில்நிறுவனங்களுக்கு கொடுக்க முடிவு செய்திருந்தது. இதற்காக டி.எல்.எப்., யூனிடெக் உள்ளிட்ட நிறுவனங்கள் டெண்டர் கோரியிருந்தன. ஆனால் கடைசி நேரத்தில் ஏலத்தில் கலந்து கொண்ட பிற நிறுவனங்களை சாக்கு போக்கு சொல்லி கழற்றிவிட்டு அப்படியே டி.எல்.எப். நிறுவனத்துக்கு தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது ஹரியானா அரசு. டி.எல்.எப். நிறுவனத்துக்கு சாதகமாக ஹரியானா அரசு நடந்து கொண்டதன் பின்னணி என்ன?
குற்றச்சாட்டு 3: டி.எல்.எப். நிறுவனம் மானேசரில் கட்டிவரும் குடியிருப்புக்காக விதிகளை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்?
குற்றச்சாட்டு 4: ரூ50 லட்சத்தில் தொடங்கப்பட்ட சோனியாவின் மருமகன் வத்ராவின் நிறுவனம் குறுகிய காலத்தில் ரூ500 கோடிக்கு சொத்துகளை வாங்கிக் குவித்தது எப்படி? வருமான வரித்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.
குற்றச்சாட்டு 5: ஹரியானா மாநில அரசு ஒரு குறிப்பிட்ட பகுதியில் நில ஆர்ஜித அறிவிப்பை வெளியிட்டுகிறது. மக்கள் நில ஆர்ஜிதம் செய்யப்படுகிறது என்பதால் கணிசமான விலைக்கு வாங்க முன்வந்த டி.எல்.எப். நிறுவனத்துக்கு விற்பனை செய்கின்றனர் விவசாயிகள். ஆனால் ஹரியானா அரசாங்கமோ திடீரென நில ஆர்ஜித அறிவிப்பை ரத்து செய்துவிட்டு கண்டு கொள்ளாமல் இருக்கிறது. ஆக டி.எல்.எப். நிறுவனத்துக்கு விவசாயிகளே நிலத்தை விற்ற மாதிரி செய்துவிட்டது ஹரியானா அரசு.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதுடன் ஹரியானா அரசுக்கும் டி.எல்.எப்.க்குமான உறவு குறித்து வெள்ளை அறிக்கையையும் அந்த மாநில அரசு வெளியிட வேண்டும் என்றும் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.