பிளாஸ்டிக் தேசிய கொடிகளுக்கு தடை?: மத்திய அரசு ஆலோசனை
டெல்லி: சிறிய அளவிலான பிளாஸ்டிக் தேசிய கொடிகள் சுகாதாரத்திற்கு கெடுதல் விதிப்பதாலும், கொடி அவமதிப்பு ஏற்பட வழி வகுப்பதாலும், அவற்றை தடை செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதையடுத்து விரைவில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளுக்கு தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
சுதந்திர தினம், குடியரசு தினம், நாட்டு தலைவர்கள் நினைவு தினம் போன்ற நாட்களில் தேசிய கொடிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சிறிய அளவிலான பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் மூவர்ண தேசிய கொடி அதிகளவில் விற்பனைக்கு வருகிறது.
நாட்டு சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவை கொண்டாடிய பிறகு, தேசிய கொடிகள் தரையில் வீசப்படுகிறது. ஆனால் அவை பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படுவதால், மண்ணை மாசுப்படுத்துகிறது.
இதனால் தேசிய கொடி அவமதிப்பு மற்றும் சுற்றுச்சுழல் மாசு ஆகியவை ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் சிறிய அளவிலான தேசிய கொடிகளுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இது குறித்து மத்திய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் உட்பட பலதரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து கருத்து தெரிவிக்க எந்த காலகெடுவும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.
மத்திய அரசின் இந்த பரிந்துரையை மாநில அரசுகள் ஏற்கும் பட்சத்தில், பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான தேசிய கொடிகளுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது. காகிதம் மூலம் மட்டுமே தேசிய கொடிகள் தயாரிக்க அனுமதி அளிக்கப்படும்.
இந்திய சட்ட விதிமுறைகளின் கீழ் தேசிய கொடியை சேதப்படுத்தல், எரித்தல், அவமதித்தல் போன்ற நடவடிக்கைகள் குற்றமாக கருதப்படுகிறது. பொது இடத்தில் இது போன்ற தேசிய கொடி அவமதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.