வாடிய பயிரைப் பார்த்த கடலூர் விவசாயி மாரடைப்பில் மரணம்
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, தண்ணீரின்றி காய்ந்து போன நெற்பயிர்களைப் பார்த்த விவசாயி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அடுத்த, பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்தவர், சக்கரவர்த்தி, 45. தனக்குச் சொந்தமான அரை ஏக்கர் நிலத்திலும், குத்தகை மூலம், ஒரு ஏக்கர் நிலத்திலும் நெல் பயிரிட்டிருந்தார். நன்றாக செழித்து வளர்ந்த பயிர்கள் கடந்த சில நாட்களாக தண்ணீர் இன்றி வாடின. இதைக்கண்ட சக்ரவர்த்தி கவலைப்பட்டார்.
இந்தி நிலையில் நேற்று காலை வயலுக்குச் சென்று பார்வையிட்டார் சக்ரவர்த்தி. அங்கே வயல்பகுதி வெடித்தும் நெற்பயிர்கள் கருகியும் காணப்பட்டன. இதனால் மனம் நொந்த சக்ரவர்த்திக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே நிலத்திலேயே சுருண்டு விழுந்து மரணமடைந்தார். அப்போது அங்கு வந்த சிலர் சக்ரவர்த்தியின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்து வந்தனர்.
ஏற்கனவே தண்ணீர் இன்றி பயிர்கள் வாடியதைக் கண்ட நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications