ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் படுகொலை- ஐ.நா. விசாரணை தேவை இல்லை: இந்தியா!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் இரு இந்திய ராணுவ வீரர்களை படுகொலை செய்து தலையைத் துண்டித்த சம்பவம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை தேவை இல்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய வீரர்கள் இருவர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி, தமது நாட்டு ராணுவத்தினர் இத்தகைய செயலில் ஈடுபடவில்லை. வேண்டுமானால் மூன்றாம் தரப்பு விசாரணையை நடத்தட்டும் என்று கூறியிருந்தார்.
பாகிஸ்தானின் இக்கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ராணுவ வீரர்கள் படுகொலை விஷயத்தை சர்வதேசமயமாக்க விரும்பவில்லை. இந்திய ராணுவத்தினர் எல்லை தாண்டி சென்று தாக்குதலையும் நடத்தவில்லை. இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையும் தேவையற்றது என்றார்.
இதேபோல் அமெரிக்காவும் பாகிஸ்தானின் சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை நிராகரித்திருக்கிறது.