நாடார்களை பற்றி கருத்தை நீக்காவிட்டால் குமரி மாவட்டத்திற்குள் அமைச்சர்கள் நுழையக் கூடாது.. வைகோ
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் உள்ள நாடார்களுக்கு எதிரான கருத்துக்களை நீக்க வலியுறுத்தி இன்று வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்குப் பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
குமரி மாவட்டத்தில் உள்ள நாடார் சமுதாய மக்களை வந்தேறிகள் என்று சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனை நீக்க வலியுறுத்தி கடந்த மாதம் நாகர்கோவிலில் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.
மத்திய அமைச்சர் பல்லம் ராஜூ, பாடப்புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் நீக்கப்படும் என்றுதான் கூறியுள்ளாரே தவிர அதை உறுதியாக சொல்லவில்லை. வரும் கல்வியாண்டிலேயே நாடார்களைப் பற்றிய தவறான கருத்துக்களை நீக்கவேண்டும். இல்லாவிட்டால் மத்திய அமைச்சர்கள் யாரையும் குமரி மாவட்டத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்று வைகோ கூறினார்.