தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் இணைந்தால்..: மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சியின் தென் மாநில மாநாடு பெங்களூரில் நடந்தது. அதில் பேசிய மாயாவதி,
இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் சமூகத்தில் அவர்களும் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழும் வகையில் அம்பேத்கர் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கினார்.
ஆனால், அதில் இடம் பெற்றுள்ள பலன்கள் முழுமையாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதை மேலாதிக்க அரசியல்வாதிகள் தடுத்து வருகின்றனர்.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரின் வாழ்க்கைத் தரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அரசியல் சாசனத்தின் பலனை மக்களுக்கு கிடைக்கச் செய்யாமலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தி அவர்களுக்குள்ளேயே கலவரத்தையும் ஏற்படுத்தி அந்த இனங்களையே அழிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழங்குடியின மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து விரட்டி அந்த இடத்தை குறைந்த விலைக்கு பெற்று தொழில் நிறுவனங்களுக்கு அதிகவிலைக்கு விற்கப்படுகிறது. பழங்குடியினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்கள் தெருவில் நிற்கின்றனர்.
ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் சமூகத்தினர் அரசியல் சாசனத்தின் அனைத்து பலன்களையும் பெற அவர்களுக்குள் ஒற்றுமை வேண்டும். ஒற்றுமை என்றால் அவர்களுக்கு திருமணம் செய்து கொள்வது, விருந்து கொடுத்து மகிழ்வது என்று பொருள் இல்லை. அவர்கள் அனைவரும் இணைந்து அரசியல், வாக்குச் சக்தியாக உருவாக வேண்டும் என்று 1948ம் ஆண்டே அம்பேத்கர் கூறினார்.
மாற்றம் வேண்டுமென்றால் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் இணைந்து அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும். இதுவே நிரந்தரத் தீர்வைக் கொடுக்கும்.
பிற்படுத்தப்பட்டோரிலும் வறுமையில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தாழ்த்தப்பட்டோருக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். சிறுபான்மையினர் நலனுக்காக அமைக்கப்பட்ட சச்சார் குழு அளித்த பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வைத்தும் அதை அரசு கண்டுகொள்ளவில்லை என்றார் மாயாவதி.