போராட்டம் நடத்திய கைதிகளை அறைக்குள்ளேயே அடைத்து வைத்த கோவை சிறை நிர்வாகம்!
கோவை: கோவை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபடுவதால் குண்டர் சட்ட கைதிகளை அறைகளை விட்டு வெளியே விடாமல் பூட்டியே வைத்தும் உறவினர்களை சந்திக்க தடை விதித்தும் சிறை நிர்வாகம் தண்டனை கொடுத்திருக்கிறது.
கோவை சிறையில் முதலாவது பிளாக்கில் 80 குண்டர் சட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த பகுதியில் சிறை வார்டன்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சந்தோஷ் என்ற கைதி தமக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி வெளியே சிகிச்சைக்கு அனுப்பக் கோரியிருக்கிறார். ஆனால் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் சிறை வார்டர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் வார்டர் ஒருவர் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து கைதிகளை வார்டர்கள் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர்.
இதனால் தங்கராஜ், சந்தோஷ், வேலுசாமி உள்ளிட்ட கைதிகள் சிறை கட்டிடத்தின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இவர்கள் நீண்ட நேரம் போராட்டம் நடத்தினர். பின்னர் துணை கமிஷனர் சுகுமாரன் கைதிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் குண்டர் சட்ட கைதிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு தண்டனையாக இன்று அவர்கள் அடைக்கப்பட்ட அறைகளில் இருந்து திறந்து விடவில்லை. அனைவருக்கும் சாப்பாடு அந்த பிளாக்கிலேயே வழங்கப்பட்டது. தண்டனைக் காலம் முடியும் வரை உறவினர்களைப் பார்க்கவும் அவர்களுக்கு தடை விதித்திருக்கிறது சிறை நிர்வாகம்!