திமுக ஆட்சிக் காலத்தில் புதிய தலைமைச் செயலகத்துக்கு முறையாக அனுமதி பெறவில்லை: தமிழக அரசு புகார்
சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்துக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறவில்லை என்று பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.
புதிய தலைமைச் செயலகத்தை சிறப்பு மருத்துவமனையாக மாற்ற எதிர்ப்பு தெரிவிக்கும் மனு மீது பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு மீது தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் எம். சொக்கலிங்கம், துறைசார் நிபுணத்துவ உறுப்பினர் பேராசிரியர் ஆர். நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணை நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீதகிருஷ்ணன் ஆஜரானார்.
அப்போது, எந்தவொரு புதிய திட்டத்துக்கும் முதலில் கட்டுமானப் பணிக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற வேண்டும். கட்டுமானப் பணிகள் முடிந்த பின் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக மீண்டும் ஒருமுறை வாரியத்தின் அனுமதி பெற வேண்டும். ஆனால், புதிய தலைமைச் செயலகம் கட்ட முந்தைய ஆட்சியில் முறையாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறவில்லை என்றார்.
இதற்கு தீர்ப்பாய நீதிபதிகள், நீங்கள் மட்டும் எப்படி மருத்துவமனையாக மாற்றினீர்கள்? என்று கேள்வி எழுப்ப. அந்தக் கட்டடத்தின் சிறிய பகுதியில் மட்டுமே மருத்துவமனை செயல்பட்டது. மருத்துவமனையாக மாற்றும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தால், அவற்றை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும் இந்த மேல்முறையீடு அரசியல் உள்நோக்கம் கொண்டதும் என்றும் கூறினார்.
இந்த வழக்கின் விசாரணை இன்றும் நடைபெற்றது.