கொடுமுடி பகுதியை தனி தாலுகாவாக அறிவிக்க சர்வகட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை
ஈரோடு: கொடுமுடியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என சர்வ கட்சிகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் இருந்து சுமார் 47 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கொடுமுடி. கொடுமுடி சுற்றுவட்டார பகுதியில் 9 பேரூராட்சிகள் மற்றும் 10 பஞ்சாயத்து அமைப்புகள் உள்ளன. மேலும் அரசு மருத்துவமனை, நீதிமன்றம், 5 அரசு வங்கிகள், 4 தனியார் வங்கிகள், 32 மத்திய மாநில அரசு அலுவலகங்கள் ஆகிய முக்கிய கேந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன .
இங்குள்ள காலிங்கராயன் வாய்க்கால் மற்றும் கிணற்று பாசனத்தின் மூலம் 10,000க்கும் மேற்ப்பட்ட நிலங்களில் மஞ்சள், நெல், வாழை, கரும்பு, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும், இந்த பகுதிக்கு முத்தாய்ப்பு வைத்தாற்போல் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் பரிகார ஸ்தலம் உள்ளது. இந்த ஸ்தலத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து யாத்ரீகர்கள் வந்து பரிகாரம் செய்து விட்டு செல்கின்றனர் .
இத்தகைய சிறப்பு அம்சங்களை கொண்ட கொடுமுடி பகுதியினை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இது தொடர்பாக இந்த தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், முதல்வர் அலுவலகம் என அனைவருக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் கொடுமுடி பேரூராட்சி சார்பில் கவுன்சிலர்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமை வகித்தார். துணை தலைவர் மனோகரன், செயல் அலுவலர் நாதவேதலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் ஈரோட்டை இரண்டாக பிரித்து கொடுமுடி பகுதியினை தனி தாலுகாவாக அறிவிக்க தமிழக அரசை கேட்டுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போல் சர்வ கட்சியினர் சார்பில் கூட்டம் நடைபெற்றது. அதிலும் கொடுமுடி பகுதியினை தனி தாலுகாவாக அறிவிக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைத்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.