காவி தீவிரவாதப் பேச்சு புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் - ஷிண்டே
ஷிண்டேவின் இந்தப் பேச்சால் கடும் அதிருப்தி அடைந்த பாஜக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்றத்தையும் செயல்பட விடாமல் முடக்குவோம். உடனடியாக ஷிண்டே பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று பாஜக அறிவித்து செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் பாஜகவை சமாதானப்படுத்த களம் குதித்தன. நேற்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை லோக்சபா சபாநாயகர் மீரா குமார் கூட்டினார்.
இக்கூட்டத்தில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கடும் ஆவேசத்துடன் பேசினார். இதையடுத்து கூட்டம் முடிந்தவுடன், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களை அமைதிப்படுத்தும் விதத்தில், எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் சந்தித்துப் பேசினார். அப்போது இந்தப் பிரச்சினையில் இணக்கமான தீர்வுக்கு இருவரும் சம்மதித்தனர்.
அதைத் தொடர்ந்து சுஷில் குமார் ஷிண்டே ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், கடந்த மாதம் நடந்த ஜெய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் நான் பேசிய பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது.
நான் உள்நோக்கத்துடன், தீவிரவாதத்தை எந்த மதத்துடனும் தொடர்புபடுத்தவில்லை. இருப்பினும், எனது பேச்சு யாரையேனும் காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இத்துடன் பாஜக சமாதானமடைந்து விடுமா அல்லது தொடர்ந்து ஷிண்டேவின் ராஜினாமாவில் உறுதியாக இருக்குமா என்பது நாடாளுமன்றத்தில் தெரிய வரும்.