கசாப், அப்சல் குருவுக்கு கருணை காட்டாததால் பிரணாப்புக்கு தீவிரவாதிகள் மிரட்டல்!

மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப், கடந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி புனே சிறையில் தூக்கிலிடப்பட்டான். இவனது கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்ததைத் தொடர்ந்து அவன் தூக்கிலிடப்பட்டான்.
இதேபோல நாடாளுமன்ற தாக்குதல் வழக்கின் குற்றவாளியான அப்சல் குருவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். இதையடுத்து அவர் பிப்ரவரி 9ம் தேதி தூக்கிலிடப்பட்டார்.
இதுவரை இருந்த குடியரசுத் தலைவர்களிலேயே பிரணாப் முகர்ஜி காலத்தில்தான் அதிக அளவிலான தூக்குத் தண்டனைகள் நிறைவேறி வருகின்றன, அதிக அளவிலான கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்ற பெயரும் ஏற்பட்டுள்ளது.
மேலும் இரு முக்கியக் குற்றவாளிகளின் கருணை மனுக்களை பிரணாப் நிராகரித்திருப்பதால் அவருக்கு தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் எழுந்துள்ளதாகவும் உளவுத்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளனவாம்.
இதையடுத்து பிரணாப் முகர்ஜியின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையைப் பொறுத்தவரையில் அது பாதுகாக்கப்பட்ட இடம் என்பதால் மிக அதிகபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரணாப் முகர்ஜி வெளியில் செல்லும் போதும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும், வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஆகியவற்றின்போதும் கூடுதல் பாதுகாப்பு போடவும் உஷாராக இருக்கவும் பாதுகாப்பு படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications