என் ஆதரவு இல்லாமல் யாரும் பிரதமர் ஆக முடியாது: மோடி மீது நிதிஷ்குமார் மறைமுக தாக்கு
இதன்மூலம் தனது ஆதரவு இருந்தால் மட்டுமே யாரும் ஆட்சிக்கு வர முடியும் என்று மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார் நிதிஷ்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று நிதிஷ் மாபெரும் பேரணியை நடத்தினார். அதில் பேசிய அவர், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு தர வேண்டும். இல்லாவிட்டால் 2014ம் ஆண்டில் அதை நாங்களே எடுத்துக் கொள்வோம் என்றார் (அந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடப்பது குறிப்பிடத்தக்கது)
பாஜக கூட்டணியில் உள்ள அவர் நேற்றைய பேரணிக்கு பாஜகவைச் சேர்ந்த யாரையும் அழைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேரணியில் அவர் பேசுகையில், நாட்டிலேயே உண்மையான வளர்ச்சியைக் காட்டியுள்ள மாநிலம் பீகார் தான். சிறப்பான வளர்ச்சியடைந்த மாநிலம் எது என்பது குறித்து இப்போது அதிகம் பேசப்படுகிறது. பீகார் தான் உண்மையான ரோல் மாடல். பீகாரில் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து வளர்ச்சியை எட்டியுள்ளோம். இங்கு இந்து, முஸ்லீம், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்கள் என அனைவரும் வளர்ச்சியின் கனியை ருசித்து வருகின்றனர். இதனால் நாட்டுக்கே பீகார் தான் உண்மையான ரோல் மாடல் என்றார்.
இதன்மூலம் குஜராத் தான் மிகச் சிறந்த வளர்ச்சியடைந்த மாநிலம் என்று அம் மாநில முதல்வர் நரேந்திர மோடியும் பாஜகவும் கூறி வருவதற்கு பதில் தந்துள்ளார் நிதிஷ்குமார். மேலும் பாஜக கூட்டணியில் இருந்தாலும் மோடியை ஆதரிக்க மாட்டேன் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், பாஜகவிடம் இருந்தும் காங்கிரசிடமிருந்தும் சம தூரத்தில் விலகி இருப்பதையும் நிதிஷ்குமாரின் பேச்சு சுட்டிக் காட்டியது.
அவர் கூறுகையில் பீகார், ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஆதரவு இல்லாமல் யாரும் மத்தியில் ஆட்சிக்கு வந்துவிட முடியாது என்றார். இந்த மாநிலங்களை ஆளும் நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜி ஆகியோர் காங்கிரசையும் பாஜகவையும் சம தூரத்தில் வைத்துள்ளனர் என்பதும், கூட்டணியில் இருந்தாலும் பாஜகவிடம் இருந்து நிதிஷ்குமாரும் விலகியே இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசுக்கு எதிராக நிதிஷ்குமார் நடத்திய இந்தப் பேரணி உண்மையில் பாஜகவைத் தான் மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.