சங்கரராமன் கொலை வழக்கு- முக்கியக் குற்றவாளி கதிரவன் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவர் 2004ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி கோவில் அலுவலகத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பமாக ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் ஆகியோர் சிக்கினர். இருவரையும் போலீஸார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அப்பு என்கிற கிருஷ்ணசாமி, கதிரவன், மாட்டு பாஸ்கர், சின்னா உள்ளிட்டோரும் கைது செய்யபப்பட்டனர். இதில் கைதான ரவிசுப்பிரமணியம் அப்ரூவர் ஆகி விட்டார். தற்போது வழக்கில் சிக்கிய அனைவரும் ஜாமீனில் உள்ளனர். வழக்கு புதுவை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
தற்போது 40 வயதாகும் கதிரவன், சென்னை கே.கே.நகரில் வசித்து வந்தார். இன்று காலை தனது வீட்டிலிருந்து காரில் புறப்பட்டார் கதிரவன். டிரைவர் காரை ஓட்டினார். அப்போது திடீரென ஒரு கார், கதிரவன் காரை மறித்து நின்றது. பின்னர் அந்தக் காரிலிருந்து ஐந்து பேர் கொண்ட கும்பல் இறங்கி வந்ததது. அனைவரும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் காருக்குள் பாய்ந்தனர்.
இதைப் பார்த்த கதிரவன் காரை விட்டு இறங்கி ஓடினார். இதையடுத்து அக்கும்பலும் கதிரவனை விரட்டிச் சென்று மடக்கி சரமாரியாக வெட்டித் தள்ளியது.
ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்த சாலையில் ஓட ஓட கதிரவன் வெட்டப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கதிரவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இந்தக் கொலையைச் செய்தது யார் என்பது தெரியவில்லை. சங்கரராம்ன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாருக்கேனும் இதில் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.