ராகுல் காந்தியைத்தான் மக்கள் பிரதமராக்க விரும்புகின்றனர்: காங்கிரஸ்
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேற்று முன் தினம் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, உங்களை பிரதமராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், இது ஒரு கற்பனையான கேள்வி. அதுபோன்ற நிலை வரும்போது, உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
இதனால் 3-வது முறையாக மன்மோகன் சிங்குக்கு பிரதமராவதில் தயக்கமில்லை என்ற கருத்து எழுந்தது. மன்மோகன்சிங்கின் அரசியல் ஆசை நீடிக்கிறது என்று பாஜக விமர்சித்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையேயும் வெவ்வேறு கருத்துகள் வெளிப்பட்டு வருகின்றன. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி, லோக்சபா தேர்தல் நடக்கும்வரை மன்மோகன் சிங்தான் இந்தியாவின் பிரதமர். 2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு யார் பிரதமர் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களும் கட்சித் தலைமையும் சேர்ந்து முடிவு எடுப்பார்கள். ஆனால் ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் இதயத்தில் ராகுல்ஜி பிரதமராக வேண்டுமென்ற ஆசை இருக்கிறது என்றார்.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறுகையில், பிரதமரிடம் குறிப்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்த நிலை வரும்போது யோசிப்போம் என்று பதில் சொன்னார். பத்திரிகைகள் இதனை விதவிதமாக அர்த்தப்படுத்திக் கொள்கின்றன என்றார்.
மத்திய தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறுகையில், கற்பனையான ஒரு நிலை பற்றிய கேள்விக்கு பிரதமர் கூறிய பதிலை தேவையின்றி திரித்து புரிந்துகொள்ள வேண்டாம். அவர் சொன்ன கருத்துக்கு கூடுதலாகவோ குறைத்தோ எதையும் சொல்ல வேண்டியதில்லை. பிரதமரின் கருத்தை ஆராய்வது தேவையற்ற வேலை என்றார்.