கார்ட்டூன் மூலம் அவமரியாதை... சிஎன்என் ஐபிஎன் மீது ஜெ. அவதூறு வழக்கு
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை அவமரியாதை செய்யும் வகையில் கார்டடூன் செய்தியை வெளியிட்டது தொடர்பாக சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அரசு வக்கீல் ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது...
சி.என்.என்.- ஐ.பி.என். டி.வி.சேனல் 2.4.2013 அன்று முதல்வருடன் பேட்டி காண்பது போன்ற கற்பனையான செய்தி கார்ட்டுன் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியின் வர்ணணையாளர் சைரஸ் கோச்சா முதல்வர் ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்பது போலவும், அதில் கார்ட்டுனாக சித்தரிக்கப்பட்ட முதல்வர் பதில் அளிப்பது போலவும் இருந்தது.
அதில் முதல்வர், கருணாநிதியும் அவரது பிள்ளைகளும் தமிழ்நாட்டை குடும்ப சொத்தாக நடத்தி வருகின்றனர் என்று கூறுவது போலவும் அதற்கு சைரஸ் கோச்சா நீங்கள் தமிழ்நாட்டை எப்படி நடத்துகிறீர்கள் என்று கேட்பது போலவும், அதற்கு ஒரு முதலாளியைப் போல் என்று முதல்வர் பதில் அளிப்பதாகவும் காட்சிகள் இடம் பெற்று உள்ளது.
இந்த நிகழ்ச்சி வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் முதல்வருக்கு தீங்கு ஏற்படுத்தும் விதமாக ஒளி பரபரப்பு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியால் முதல்வருக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனவே சி.என்.என்.- ஐ.பி.என். டி.வி.சேனல் இயக்குனர் விஜயகுமார், நிகழ்ச்சி தொகுப்பாளர் சைரஸ் கோச்சா, இந்த நிகழ்ச்சியை எழுதிய ஆசிஸ் சக்யா ஆகியோர் மீது கிரிமினல், அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications