பிறந்த நாளையொட்டி தீரன் சின்னமலை சிலைக்கு ஜெயலலிதா மரியாதை
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி சென்னை, கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தீரன் சின்னமலை இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஆதிக்கத்தைத் எதிர்த்து போராடியவர். சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் 'இடையே ஒரு சின்னமலை' என்று போற்றப்பட்டவராய், தீரத்துடன் செயல்பட்டு ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.
தீரன் சின்னமலையின் தியாக வாழ்க்கை:
தீரன் சின்னமலை தியாகத்தைப் போற்றி நினைவு கூறும் வகையிலும் அவரது வீரதீர செயல்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளத்தக்க வகையிலும் முதலமைச்சர் ஜெயலலிதா தீரன் சின்னமலை வெண்கலச் சிலை அமைத்தல், மணி மண்டபம் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
புனரமைக்கப்படுகிறது:
சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருவுருவச்சிலை பொலிவிழந்தும் அதன் பீடம் மற்றும் சுற்றுப்புறத் தரை மிகவும் சிதிலமடைந்தும் இருந்ததை சீர்செய்து, தற்போது 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து புதுப்பொலிவுடன் புணரமைக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்படும் நினைவுகள்:
தீரன் சின்னமலை திருவுருவச் சிலை வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டதுடன் அதன் சுற்றுப்பகுதியின் பாதுகாப்புக்கு அலங்கார கிரில் மதிற்சுவர் அமைக்கப்பட்டு தரையில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீரன் சின்ன மலையின் வாழ்க்கை வரலாறு விவரங்கள் அடங்கிய பலகை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
மலர் தூவி மரியாதை:
மேலும், தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, தீரன் சின்னமலை பேரவை சார்பாக தொகுக்கப்பட்ட தீரன் சின்ன மலை பிறந்தநாள் விழா மலரை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட, சட்ட மன்ற உறுப்பினர் தனியரசு பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச்செயலாளர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.