மான் கறி சாப்பிட்டோம்... போலீசுக்கு ரூ.50,000 அபராத 'பில்' கட்டினோம்!
உடுமலை: மான் கறி சமைத்துச் சாப்பிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பின் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்திய பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
உடுமலை வனச் சரகம் பருத்தியூர் அருகில் உள்ள பாண்டியன் கரடு என்ற பகுதியில் ஒரு சிலர் மான் வேட்டையாடியதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்குச் வனத்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கடமான் ஒன்றைக் கொன்று அதை சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக செந்தில் (45), திருமலைசாமி (40), கோதண்டசாமி (35) ஆகிய மூவரை வனத்துறையினர் கைது செய்தனர். இது குறித்து உடுமலை வனச்சரகர் தங்கராஜ் பன்னீர்செல்வம் புதன்கிழமை கூறியதாவது, 'செவ்வாய்க்கிழமை காலையில் வனப்பகுதியில் இருந்த ஒரு கடமானை சில செந்நாய்கள் துரத்திக் கொண்டு வந்தது.
அப்போது ஓடி வந்த மான் ஒரு தோட்டத்திற்குள் அடைக்கலமானது. இதைப் பயன்படுத்திக் கொண்ட சிலர் அந்த மானை கொன்று அங்கேயே சமைத்து சாப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, அபராதம் செலுத்தியதும் விடுதலை செய்யப்பட்டனர்' என்றார்.