ட்ரீம்லைனர் விமானங்களை மீண்டும் இயக்க ஜப்பான் அரசு ஒப்புதல்
டோக்கியோ: அமெரிக்காவின் ட்ரீம்லைனர் விமானங்களை மீண்டும் இயக்க ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ட்ரீம்லைனர் என்ற அதிநவீன விமானத்தின் பேட்டரி தொழில்நுட்பத்தில் கோளாறு இருப்பது தெரியவந்தது. இதனால் இந்த விமானங்களின் சேவை உலகம் முழுவதும் நிறுத்தப்பட்டது. பின்னர் கோளாறை சரிசெய்த போயிங் நிறுவனம் சோதனை ஓட்டம் நடத்தி வெற்றி கண்டது. இதையடுத்து புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரீம்லைனர் விமானங்களை மீண்டும் இயக்குவதற்கு அமெரிக்காவின் விமான போக்குவரத்து நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதை ஏற்றுக் கொண்ட ஜப்பான் நாட்டு அரசு தற்போது ட்ரீம்லைனர் விமானங்களை மீண்டும் இயக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஜப்பான் ஏர்லைன்ஸ் மற்றும் ஆல் நிப்பான் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் ட்ரீம்லைனர் விமானங்களை அதிகம் பயன்படுத்துகின்றன. இருப்பினும் சோதனை நடத்தி போக்குவரத்துக்குப் பயன்படுத்த ஒரு மாத காலமாகும்.
அமெரிக்காவின் முடிவைத் தொடர்ந்து ஜப்பான் ஒப்புதல் தெரிவித்திருப்பதால் இதர நாடுகளும் ட்ரீம்லைனர் விமானங்களை மீண்டும் இயக்கக் கூடும் எனத் தெரிகிறது.