பாளை மத்திய சிறையில் 103 வழக்குகளின் கீழ் கைதானவரை சந்தித்த சீமான்

கூடங்குளத்தைச் சேர்ந்தவர் தேங்காய் கணேசன்(55). சீமானின் நாம் தமிழர் கட்சியின் ராதாபுரம் ஒன்றிய செயலாளராக இருக்கிறார். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தீவிரமாக போராடி வருபவர். கூடங்குளம் போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதன் பிறகும் அணு சக்திக்கு எதிரான போராட்டக்குழு நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார். தேங்காய் கணேசன் மீது போலீசார் ஒவ்வொரு போராட்டம் தொடர்பாகவும் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்தனர். தற்போது அவர் மீது 103 வழக்குகள் உள்ளன. சரண் அடையுமாறு கடந்த 11-12-12 அன்று தபால் மூலம் கூடங்குளம் போலீசார் தேங்காய் கணேசனுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
இருந்த போதிலும் அவர் சரண் அடையாமல் இருந்து வந்த நிலையில் கூடங்குளம் பஜார் பகுதியில் நின்று கொண்டிருந்த அவரை கடந்த மார்ச் 15ம் தேதி போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கூடங்குளம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பாளை சிறையில் இருக்கும் கணேசனை சந்திக்க நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று நெல்லை வந்தார்.
கட்சி நிர்வாகிகளுடன் சிறைக்கு சென்ற அவர், அங்கு அடைக்கப்பட்டு இருக்கும் கணேசனை சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாம் தமிழர் கட்சியின் ராதாபுரம் ஒன்றிய செயலாளரான தேங்காய் கணேசன் மனித உயிரை பறிக்கத் துடிக்கும் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றவர். அவர் மீது கூடங்குளம் போலீசார் 103 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக அவர் தேசத்துக்கு எதிராக போர் தொடுத்த பிரிவிலும் வழக்கு போட்டிருக்கிறார்கள்.
அணு உலை குறித்த மக்கள் அச்சத்தை மத்திய அரசு போக்கிட வேண்டும். பேரிடர் பயிற்சி வழங்காமல் அணு உலையை திறக்க நினைப்பது தவறான நடவடிக்கை. இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் அப்பாவி மீனவர்களை நமது எல்லைக்குள் வந்து சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்கிறது. இப்படி அறிவிக்கப் படாத போரை நடத்தி வரும் சிங்கள ராணுவம் இதுவரை 800 பேரை கொன்று இருக்கிறது. இந்த அத்துமீறல்கள் இந்தியாவுக்கு எதிரான போராக மத்திய அரசுக்கு தெரியவில்லை. ஆனால், நியாயமான கோரிக்கைக்காக அறவழியில் போராடும் மக்கள் மீது தேசத்துக்கு எதிராக போர் தொடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்படுவது, அந்த போராட்டத்தில் ஈடுபடும் மக்களை மிரட்டும் செயல் என்றார்.












Click it and Unblock the Notifications