என்.எல்.சி தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குளை தனியாருக்கு விற்பனை செய்வது என்ற தனது முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி என்.எல்.சி தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 10-ஆவது நாளை எட்டியுள்ளது.
ஆர்ப்பாட்டம், அனல் மின் நிலையம் முற்றுகை, ரயில் மறியல் போராட்டம் என பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வரும் என்.எல்.சி. தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுகின்றனர்.
காலவரையற்ற உண்ணாவிரதம்
இந்த நிலையில் நெய்வேலி க்யூ பாலம் அருகே நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரத்தில் ஈடுபட முடிவு தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
சாதகமான முடிவு
மத்திய அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் அனைத்துச் சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் ஈடுபட்டு வருவதாகவும், சாதகமான முடிவை மத்திய அரசு அறிவிக்கும் வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் என்.எல்.சி பங்குவிற்பனை விவகாரம், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவது ஆகியவை குறித்து சென்னையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் அதிகாரிகள் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.