காங். காரிய கமிட்டியில் 'கூர்க்காலாந்து' விவகாரமும் ஆலோசனை! யூனியன் பிரதேசமாக அறிவிப்பு?
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா அல்லது ராயல தெலுங்கானா என்ற மாநிலத்தை உருவாக்க ஆளும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துவிட்டது. இன்று இரவு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் கடந்த ஒரு மாதகாலமாக தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக எப்படியெல்லாம் தீவிர ஆலோசனைகள் நடைபெற்றதோ அதேபோல் கூர்க்காலாந்து விவகாரம் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன.
மேற்குவங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மலைப் பிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பது 20 ஆண்டுகால கோரிக்கை. இதன் முதல் கட்டமாக சுயாட்சி நிர்வாக கவுன்சிலும் பின்னர் கூடுதல் அதிகாரங்கள் கொண்ட நிர்வாக அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது தெலுங்கானா விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் இதில் கூர்க்காலாந்து கோரிக்கையும் இணைந்து கொண்டது.
கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் திக்விஜய்சிங், அம்பிகா சோனி, சி.பி. ஜோஷி, அஜய் மக்கான் ஆகியோர் டெல்லியில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சாவின் பொதுச்செயலர் ரோஷன் கிரி தலைமையிலான குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் மத்திய அமைச்சர்கள் ஆண்டனி, சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரையும் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பிமல் குருங், கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கூர்க்காலாந்து அல்லாத எந்த ஒரு தீர்வையும் நாங்கள் ஏற்க மாட்டோம். லட்சக்கணக்கான கூர்க்கா இன மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் எந்த ஒரு முடிவையும் மத்திய அரசு மேற்கொண்டால் கூர்க்காலாந்து நிர்வாகத்தில் இருந்து முதல் ஆளாக ராஜினாமா செய்வேன் என்றார்.