மும்பையில் மமதா.. 45 தொழிலதிபர்களுடன் ஆலோசனை!
மும்பை: மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி மும்பையில் முகேஷ் அம்பானி உட்பட 45 தொழிலதிபர்களை நேரில் சந்தித்து மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
மும்பை உலக வர்த்தக மையத்தில் நேற்று மமதா, மேற்கு வங்க அமைச்சர்களுடன் முகேஷ் அம்பானி உள்ளிட்ட 45 தொழிலதிபர்கள் ஆலோசனை நடத்தினர். இக் கூட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் எந்தெந்த துறைகளில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தில் முழு அடைப்பு, வேலை நிறுத்தத்தை அரசு ஆதரிப்பது இல்லை. 2 ஆண்டுகாலத்துக்கு முன்புதான் அப்படியான ஒருநிலைமை இருந்தது.
மேலும் தொழிலதிபர்கள் எளிதாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தொழில் தொடங்க வசதியாக அரசாங்கமே நிலவங்கியை உருவாக்கி உள்ளது. மொத்தம் 11 ஆயிரம் ஏக்கர் நிலம் இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.