கம்பெனி விவகாரங்களில் தலையிடுவதே இல்லையே..: இது டினா அம்பானி சாட்சியம்!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான டினா அம்பானி, கம்பெனி விவகாரங்களில் தாம் தலையிடுவதே இல்லையே என்று சாட்சியமளித்திருக்கிறார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை பெற்ற நிறுவனங்களில் ஒன்று ஸ்வான் டெலிகாம். இது ரிலையன்ஸ் குழுமத்தால் தொடங்கப்பட்டது என்றும் போதுமான தகுதி இல்லாமலேயே ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை முறைகேடாக பெற்றது என்றும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் ரிலையன்ஸ் குழும அதிகாரிகள் மூவர் கைதும் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி, மனைவி டினா அம்பானி ஆகியோர் சிபிஐ தரப்பு சாட்சியமாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாட்சியமளிக்க வருமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை ரத்து செய்ய பகீரத முயற்சிகளை அனில் அம்பானியும் மனைவி டினா அம்பானியும் மேற்கொண்டனர்.
எனக்கு நினைவில் இல்லையே..- அனில் அம்பானி
ஆனால் எதுவும் பலனளிக்காத நிலையில் நேற்று அனில் அம்பானி சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். அவரிடம் 2 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் பெரும்பாலும் எனக்கு நினைவில் இல்லை .. எனக்குத் தெரியாது என்ற பதில்களையே தெரிவித்திருக்கிறார். அதுவும் ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனம் பற்றியே கேள்விபட்டதே இல்லை என்று பெரும் போடே போட்டுவிட்டார்.
டினா அம்பானி ஆஜர்
இதனிடையே இன்று அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானியும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தார்.
நான் சமூக சேவகி- டினா
அப்போது சாட்சியமளித்த டினா அம்பானி, நான் ஒரு சமூக சேவகர், சமூக சேவைகளில் ஈடுபட்டுக் கொண்டே குடும்பத்தையும் பார்த்துக் கொள்கிறேன் என்றார்
கம்பெனி விவகாரத்தில் தலையீடு இல்லை
மேலும் நான் கம்பெனி விவகாரங்களில் எல்லாம் தலையிடுவதும் இல்லை என்றும் சாட்சியமளித்திருக்கிறார் டினா அம்பானி.