தில்லு.. தூளு... இதுக்கு அர்த்தம் தீரன்!
சென்னை: அரசியல் தூள் கிளப்ப வேண்டுமென்றால் அதற்கு முக்கிய தேவை தில்..தான். எதிலும் துணிந்து இறங்க வேண்டும்,துணிச்சலுடன் செயல்பட வேண்டும். இதற்கு முழு அர்த்தமாக தீரன் விஸ்வரூபம் எடுத்துக் காட்சி தருகிறார்.
இந்த தில், தூள் எல்லாம் எதில் தெரியுமா.. கட்சி தாவுவதில்தான்.
இதுவரை எத்தனை கட்சி மாறியுள்ளார் என்பது பாவம் தீரனுக்கே கூட தெளிவாகத் தெரியாது.. அப்படி ஒரு ஜம்ப்போ ஜம்ப்பில் மூழ்கியிருக்கிறார் தீரன்.
முதல்ல பாமக
தீரன் ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபட்ட கட்சி பாமக. சும்மா இல்லை, பாமகவின் தலைவராக இருந்தவர். டாக்டர் ராமதாஸுக்கு அருகில் இருந்து செயல்படும் அளவுக்கு கட்சியில் முக்கியத்துவம் இருந்தது. ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் எல்லாம் இவருக்குப் பின்னால்தான் இருந்தனர் அப்போது.
பாமகவிலிருந்து தனிக் குடித்தனம்- தமிழ் பாமக
ஆனால் சில உள்ளடி வேலைகளால் கட்சியில் ஓரம் கட்டப்பட்டார் தீரன். இதனால் அதிருப்தியாகி தனியாக வெளியே வந்து தமிழ் பாமக என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார்.
தமிழ் பாமக வேணாம்.. பாஜக ஓ.கே.
அதன் பின்னர் அந்தக் கட்சியை அப்படியே பாஜகவுடன் இணைத்து விட்டார். அதில் கொஞ்சம் காலம் ஓடியது.
பகுஜன் சமாஜ் கட்சி சும்மா இருக்கே...
அதிலும் பிடிப்பு இல்லாமல் போகவே கேட்பாரற்றுக் கிடந்த பகுஜன் சமாஜ் கட்சியில் போய்ச் சேர்ந்தார். அதிலும் அவருக்கு ஒட்டவில்லை. இதனால் அதிலிருந்தும் விலகினார்.
நாம் தமிழராச்சே...
அங்கிருந்து விலகி சீமான் தொடங்கிய நாம் தமிழர் கட்சியில் சில காலம் இணைந்திருந்தார்.
அட நம்ம வேல்ஸ்...
இந்த நிலையில்தான் பாமகவில் பெரும் புரட்சி கிளப்பி தனியாக பிரிந்து வந்தார் முன்னாள் எம்.எல்.ஏ பண்ருட்டி வேல்முருகன். அவர் உருவாக்கிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தார்.
அம்மாவே சரணம்...
ஆனால் திடீரென அங்கிருந்து வெளியேறி அதிமுகவுக்கு தற்போது வந்து சேர்ந்துள்ளார்.
உண்மையிலேயே தீரன் பெரிய தீரர்தான் என்று அதிமுகவினரே கமுக்கமாக பேசிச் சிரிக்கிறார்களாம்.