சுடச்சுட 8கிலோவில் பாகுபலி சமோசா.. சாப்பிட ‘கட்டப்பா’ எங்க இருக்கீங்க.. ரூ. 51,000 பரிசும் தர்றாங்க!
8 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ள பாகுபலி சமோசாவை முழுமையாக சாப்பிடும் போட்டிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மீரட்: மீரட்டில் 8 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ள பாகுபலி சமோசாவை முழுமையாக சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ. 51 ஆயிரம் பரிசு என புதுமையான போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டீ குடிக்கும் போது, கூடவே வடையோ, சமோசாவோ சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என நாக்கு கேட்கும். இதனாலேயே டீக்கடைகளில் ஒருபக்கம் சுடச்சுட டீ, காபி தயார் செய்தாலும், மற்றொரு புறம் ஆவி பறக்கும் சமோசா, வடை, பஜ்ஜி போன்றவையும் அடுக்கப்பட்டிருக்கும். அதன் உள்ளே உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட மசாலா இருப்பதால், எவ்வளவுதான் பசியாக இருந்தாலும், நாலு சமோசா சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும்.
அதனாலேயே, சமோசாவை வைத்து புதுமையான சாப்பாட்டுப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது மீரட் பேக்கரி ஒன்று. ஒரே சமயத்தில் 8 கிலோ எடையுள்ள சமோசாவைச் சாப்பிட்டால் பணப்பரிசு என அறிவித்துள்ளது அந்த பேக்கரி.

சமோசா போட்டி
உத்தரப்பிரதேசம் மீரட் பகுதியில் உள்ளது கௌசல் என்ற அந்த பேக்கரி. நம்மூரில் பரோட்டா சாப்பிடும் போட்டி நடப்பது மாதிரி, இங்கு வித்தியாசமாக சமோசா சாப்பிடும் போட்டியை அறிவித்துள்ளனர். இதற்கென 8 கிலோ எடையுள்ள சமோசாவை தயாரித்து வைத்துள்ளனர். இந்த சமோசாவால் தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகி விட்டது இந்த பேக்கரி.

பணப்பரிசும் உண்டு
இந்தியாவிலேயே மிக அதிக எடை கொண்டதாகக் கருதப்படும் இந்த சமோசாவிற்கு பாகுபலி சமோசா எனப் பெயரிட்டுள்ளனர். இதனை, 30 நிமிடத்தில் முழுவதுமாக சாப்பிட்டு முடிக்கும் நபருக்கு 51 ஆயிரம் ரூபாய் பரிசு என அந்தக் கடையின் உரிமையாளர் அறிவித்துள்ளார். நம்மால் சாப்பிட முடியுமோ இல்லையோ, அந்தப் பெரிய சமோசாவை கண்ணாரக் கண்டு விட்டாவது வரலாம் என தினமும் அந்தக் கடைக்கு மக்கள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.

இப்போ 8.. அடுத்து 10
இந்தப் புதுமையான போட்டி குறித்து, அந்தக் கடையின் உரிமையாளர் சுபம் கூறுகையில், "நான் ஏதாவது வித்தியாசமாக செய்து சமோசா என்ற வார்த்தையை செய்திகளில் வர வைக்க வேண்டும் என யோசித்தேன். இதனால் பாகுபலி சமோசா என்ற ஒன்றை உருவாக்க வேண்டும் முடிவு செய்தோம். முதலில் நான்கு கிலோ சமோசாவைத்தான் உருவாக்கினோம். தற்போது, அதன் எடையை அதிகப்படுத்தி, எட்டு கிலோ சமோசாவை உருவாக்கி இருக்கிறோம். அடுத்ததாக 10 கிலோ சைஸில் சமோசா ஒன்றை உருவாக்க நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

ரூ. 1100 செலவு
இந்த எட்டு கிலோ பாகுபலி சமோசாவை உருவாக்க, சுமார் 1100 ரூபாய் வரை செலவாகிறாதாம். அதன் உள்ளே உருளைக்கிழங்கு மட்டுமின்றி பழங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இந்த பாகுபலி சமோசா சவாலில் ஒருவர்கூட வெற்றி பெறவில்லையாம்.

வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு
பலரும் இதைச் சாப்பிடுவதற்கு முயற்சித்தாலும், அரை மணி நேரத்தில் அதனை முழுவதுமாக சாப்பிட்டு முடிக்க இயலாமல் தோற்றுப் போய்விடுகிறார்களாம். போட்டியில் தான் இதுவரை ஒருவரும் ஜெயிக்கவில்லையே தவிர, கடைக்கு வாடிக்கையாளர்கள் வருவது அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் கடையின் உரிமையாளர் சுபம். உள்ளூரில் இருந்து மட்டுமல்லாமல், வெளியூரில் இருந்துகூட ஃபுட் பிளாக்கர்ஸ் பலரும் வந்து இந்த பாகுபலி சமோசா சவாலில் கலந்து கொள்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications