ஹோட்டலுக்கு செல்வது கட்டாயம்.. பெங்களூர் மாநகராட்சியின் நூதன 'பண வேட்டை..' தவிக்கும் மக்கள்
பெங்களூர்: பெங்களூரில் யாருக்காவது, கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை விடவும், அவர்களின் குடும்பத்தார்தான் ரொம்பவே பயந்து போகிறார்கள். நோயை பார்த்து இந்த பயம் கிடையாது.. மாநகராட்சி அதிகாரிகளின், மிரட்டல் காரணமாகத்தான் இந்த பயம்.
Recommended Video
ஒரு வீட்டில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அந்த வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களை நிறுவன தனிமைப்படுத்தலுக்கு கட்டாயப்படுத்துகின்றனர் பெங்களூர் மாநகராட்சி ஊழியர்கள்.
நோயால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்படும் நிலையில் மற்றவர்கள் அந்த வீட்டில் இருக்க அனுமதிக்கப்படுவது கிடையாது. எங்காவது ஒரு ஓட்டலில் கொண்டு சென்று தங்க வைக்கின்றனர்.
"இந்தியை எதிர்க்கலயே.. இந்தி ஆதிக்கத்தையும், திணிப்பையும்தான் கடுமையாக எதிர்க்கிறோம்; உதயநிதி பொளேர்
மாநகராட்சி ஊழியர்கள்
பெங்களூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள காந்திநகர் தொகுதியை சேர்ந்த மாதுசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகையில், எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதும், ஒரு சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டேன். இந்த நிலையில் வீட்டில் எனது மனைவியும், இரண்டு சிறு குழந்தைகள் மட்டும் இருந்தனர். ஆனால் மாநகராட்சியில் இருந்து தொலைபேசியில் அழைப்பதாக கூறிக்கொண்டு மனைவியின் செல்போனுக்கு அடிக்கடி சிலர் பேசியுள்ளனர்.
ஹோட்டல்கள்
தனிமைப்படுத்தலுக்காக, ஹோட்டல் அறையில் வந்து தங்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியுள்ளனர். நாங்கள் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கிறோம் என்று எவ்வளவு கூறியும் அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. வலுக்கட்டாயமாக குழந்தைகளையும், எனது மனைவியும் நிறுவன தனிமைப்படுத்துதல் என்ற பெயரில் ஹோட்டல் அறையில் தங்க வைத்துள்ளனர். இப்படி தங்க வைத்தால்தான், தங்களால் கண்காணிக்க முடியும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். இவ்வாறு ஆதங்கத்தோடு தெரிவிக்கிறார் மாதுசாமி.
7 நாட்கள் ஹோட்டல்களில்
நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன் முடிவுகள் வெளியாகி, இவர்கள் மறுபடியும் வீட்டுக்கு வருவதற்கு குறைந்தபட்சம் 7 நாட்கள் ஆகிறது. ஒருவேளை அவர்களுக்கும், கொரோனா பாதிப்பு இருந்தால், சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
நிறைய வசூல்
ஹோட்டல் அறைகள் பல்வேறு கட்டண பிரிவின் கீழ் வருகின்றன. ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கும் ஹோட்டல்களும் இருக்கின்றன. மாநகராட்சி ஊழியர்கள் அதிகாரிகள் இந்த ஓட்டலுக்குத்தான் பலரையும் பரிந்துரைக்கிறார்கள், ரூ.1,200 கட்டணத்தில் ஆரம்பிக்கும் ஹோட்டல்களும் இருக்கின்றன. ஆனால் அவர்கள் அந்த ஓட்டல்களுக்கு இவர்களை அனுப்புவது கிடையாது. எனவே ஓட்டல் உரிமையாளர்களுக்கும், மாநகராட்சி ஊழியர்கள் அல்லது தன்னார்வலர்களுக்கும், வணிக தொடர்பு இருக்கிறதா? இதில் மிகப்பெரிய ஊழல் இருக்கிறதா என்ற கேள்விகளும் மக்களிடம் எழத் தொடங்கியுள்ளன.
விதிமுறை அப்படி இல்லை
மேற்கு மண்டல மாநகராட்சி சிறப்பு அதிகாரி, உஜ்வல் கோஷ் இதுபற்றி கூறுகையில், எங்கள் காதுகளுக்கும் இதுபோன்ற புகார்கள் வந்துள்ளன. யார் இது போல கட்டாயப்படுத்துகிறார்கள் என்பது பற்றி விசாரித்து வருகிறோம். நெருக்கடியான இடங்களில் வசிக்கக்கூடிய மக்கள், அல்லது ஒரே வீட்டுக்குள் 5, 6 பேர் வசிக்கக் கூடிய சந்தர்ப்பம் வாய்த்த மக்களைத்தான் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு அனுப்புகிறோம். இடவசதி நன்கு இருந்தால் அல்லது நெருக்கடி இல்லாத ஏரியாவைச் சேர்ந்தவர்கள் என்றால், நோயாளியின் குடும்ப உறுப்பினர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறோம். நிறுவன தனிமைப்படுத்துதல் அவர்களுக்கு கட்டாயம் கிடையாது. இவ்வாறு தெரிவித்தார்.
அச்சம்
விதிமுறைகள் என்னதான் இருந்தாலும், வீட்டில் முக்கியமான ஒருவர் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தொல்லை கொடுப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த பிரச்சனையை தடுக்காவிட்டால் வீட்டில் உள்ளவர்களை ஹோட்டல்களில் தங்க வைத்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக யாருக்காவது அறிகுறி இருந்தால் கூட கொரோனா பரிசோதனை செய்துகொள்ளாமல் தவிர்க்கும் நிலை உருவாகி விடும் என்று எச்சரிக்கின்றனர் சுகாதாரத் துறை வல்லுநர்கள்.