கொரோனாவை கட்டுப்படுத்தி அசத்தல்.. பிற நகரங்களுக்கு வழிகாட்டி.. பெங்களூர் சாதித்தது எப்படி?
பெங்களூர்: 1 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை இருந்தாலும், பெரு நகரங்களை பொறுத்தளவில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில், நாட்டுக்கு வழி காட்டி வருகிறது பெங்களூர்.
Recommended Video
நேற்றைய நிலவரப்படி பெங்களூரில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 827. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 43 என்ற அளவில் உள்ளது.
பிற மெட்ரோ நகரங்களை ஒப்பிட்டால், இது மிக குறைவு ஆகும். மும்பையில் 60,228 நோயாளிகள் மற்றும் 3,167 இறப்புகள் உள்ளன. டெல்லியில் 44,688 கேஸ்கள் மற்றும் 1,837 இறப்புகள் உள்ளன. சென்னையில் 35,556 கேஸ்கள் மற்றும் 461 இறப்புகள் உள்ளன.
சீன பொருட்கள் வேணவே வேணாம்.. இந்திய மக்கள் ஆவேச முடிவு.. கூகுளில் குவியும்
ஒற்றுமை
பாசிட்டிவ் கேஸ்களின் தொடர்புகளை கண்டறிதல்தான், பெங்களூர் பார்முலா. பரிசோதனை முடிந்த 24 மணி நேரத்திற்குள் நோயாளியின் தொடர்புகள் அனைவரையும் கண்டறிந்து, தனிமைப்படுத்துதல் மற்றும் பரிசோதிப்பதில்தான் பெங்களூரின் வெற்றி அடங்கியுள்ளது.
மாநகராட்சி, மாநகராட்சியைச் சேர்ந்த சுகாதார மற்றும் குடிமை அதிகாரிகள் பகல் மற்றும் இரவு பாராமல் இந்த பணிகளில் இணைந்து செயல்படுகின்றனர்.
பெங்களூர் பார்முலா
"பெங்களூரு மாதிரியை ஒரு வாக்கியத்தில் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், அது தொடர்புகளின் ரிவர்ஸ் கண்டறிதல்" என்று கூறுகிறார், கொரோனா கட்டுப்பாடுக்காக, ஐ.சி.எம்.ஆர் தேசிய பணிக்குழுவால் அமைக்கப்பட்ட தொற்றுநோயியல், கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி குழுவின் உறுப்பினர் டாக்டர் கிரிதர் ஆர் பாபு.
அதிக பரிசோதனைகள்
ஒருவருக்கு பாசிட்டிவ் என வந்தால், சராசரியாக அவர் தொடர்பு கொண்ட 93 பேரையாவது கொரோனா சோதனைக்கு உட்படுத்தியுள்ளது கர்நாடக அரசு. தேசிய சராசரி 20 மட்டுமே. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்கள், முறையே, 8 மற்றும் 9 தொடர்புகளை மட்டுமே சோதித்து பார்த்துள்ளனர். இங்குதான் மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. "மற்ற இடங்களைப் போலல்லாமல், நாங்கள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளை நிறுவன தனிமைப்படுத்தலுக்கு (இன்ஸ்ட்டிடியூஷனல் குவாரன்டைன்) மாற்றினோம்" என்கிறார் பெங்களூரு நகரத்திற்கான கொரோனா வார் ரூம் பொறுப்பாளரான, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹெப்சிபா ராணி.
கலக்கும் செல்போன் ஆப்கள்
தொடர்புகளை கண்டறிதல் முதல் தனிமைப்படுத்தப்பட்டோரை கண்காணிப்பது வரையிலான செயல்பாடுகளுக்காகவும், புதிய நபர்கள் வருகைகளைக் கண்காணிப்பதில் இருந்து சிக்கலான நோயாளிகளைக் கண்காணிப்பது வரை ஆறு ஆப்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்ற புனைப்பெயரை, வெறும் பெருமைக்காக மட்டுமே இன்றி, இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் செயலுக்கு கொண்டுவர, சாப்ட்வேர் இன்ஜினியர்கள் கடுமையாக உழைத்து இந்த 6 ஆப்களை உருவாக்கியுள்ளனர். வீட்டு தனிமையில் இருப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை, ஜிபிஎஸ் இணைப்புடன், போட்டோ எடுத்து அப்லோடு செய்ய வேண்டும். இதற்காக ஒரு ஆப் உருவாக்கப்பட்டது. அப்படி அப்லோடு செய்யாவிட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாய்ந்தது. இதனால் வீட்டு தனிமையில் இருந்தாலும் பிற மக்களுக்கு தொற்றை பரப்ப முடியாத நிலை உருவாக்கப்பட்டது.
சிறப்பு கவனம்
கடுமையான சுவாச நோய்த்தொற்று (SARI) நோயாளிகளை இறப்புகளின் அடிப்படையில் அதிக ஆபத்துள்ள குழுவாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. ஆக்ஸிஜன் செறிவு அளவை சோதிக்க அனைத்து கிளினிக்குகளிலும் ஆக்சிமெட்ரி பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதன்படி, சுவாச பிரச்சினை உள்ளவர்கள் யாராவது மருத்துவமனை சென்றாலும், உடனடியாக ஆக்ஸிஜன் பரிசோதனை செய்யப்படுகிறது.
சந்தைகள் மூடல், மீடியாக்கள் பங்கு
பெருநகர் பெங்களூர் மாநகராட்சி (பிபிஎம்பி) தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் பி கே விஜேந்திரா கூறுகையில், பெங்களூரிலுள்ள பெரிய சந்தைகளை, ஆரம்பத்திலேயே மூடியது, கொரோனா எண்ணிக்கையை வெகுவாக குறைக்க உதவியது. "முதல் லாக்டவுனின் ஆரம்பத்தில் நாங்கள் பெரிய சந்தைகளை மூடிவிட்டோம். பெரும்பாலும், இந்த நடவடிக்கை மற்ற மாநிலங்களை சேர்ந்த யாருடைய கவனத்திற்கும் வராமல் இருந்திருக்கலாம். ஆனால், இது வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான ஒரு முக்கிய விஷயமாகும். நோய் பரவத் தொடங்கிய பின்னரே சென்னையில் (கோயம்பேடு) சந்தை மூடப்பட்டது, " என்றார் விஜேந்திரா. மேலும் கன்னட மீடியாக்களும், குறிப்பாக டிவி செய்தி மீடியாக்கள், சிறு எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும் அரசுக்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கும் வகையில் செய்திகளை ஒளிபரப்படுகின்றன. பிரச்சினையை கட்டுப்படுத்தும் வரையில், மீடியாக்கள் விடுவதில்லை. மேலும், எந்த இடத்தில் விதிமுறைகள் மீறப்படுகிறதோ, அதை வீடியோவாக எடுத்து அந்த குறைகளை களைய உதவுகின்றன.
லாக்டவுன் தளர்வுக்கு பிறகு கேஸ்கள் அதிகரிப்பு
இருப்பினும், லாக்டவுன் தளர்த்தப்பட்டதிலிருந்து, பெங்களூரில் கேஸ்கள் உயரத் தொடங்கியுள்ளன. மார்ச் 8 முதல் மே 31 வரை பெங்களூரில் 358 கேஸ்கள், 10 இறப்புகள் மற்றும் ஐந்து ஐ.சி.யூ நோயாளிகள் மட்டுமே இருந்தனர். ஜூன் 1 முதல் ஜூன் 17 வரை 469 கேஸ்கள், 33 இறப்புகள் மற்றும் 36 நோயாளிகள் ஐ.சி.யுவில் உள்ளனர். எனவே, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ஜூன் 15 ம் தேதி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் 17 பணிக்குழுக்களை அரசு அமைத்துள்ளது. மேலும் 70 வயதை தாண்டியபோதிலும், முதல்வர் எடியூரப்பா சுறுசுறுப்பாக தினமும், கொரோனா பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டங்களை நடத்தியபடியே உள்ளார். எனவே, நிலைமைக்கு தக்கபடி, உடனுக்குடன், அரசு தனது வியூகங்களை மாற்றிக்கொள்ள முடிகிறது. முதல்வரே கூட்டத்தின் தலைவராக அமர்வதால், அனைத்து துறைகளும் அவர் சொல்படி கேட்கின்றன. ஒருங்கிணைப்பு எளிமையாகிறது. பணிகள் வேகமாக நடக்கிறது.
தீவிர நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவமனையில் இடம்
அடுத்த சில வாரங்களில் கேஸ்கள் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கான அடையாளமாக, கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் நேற்று முன்தினம், சில புதிய நடவடிக்கைகளை அறிவித்தார். கொரோனா மருத்துவமனைகளை அறிகுறியுள்ள நோயாளிகளுக்கு மட்டுமே அனுமதித்தல், அறிகுறி இல்லாத நோயாளிகள் ஹோட்டல் போன்ற நிறுவன வசதிகளைப் பயன்படுத்துதல் என்பது அந்த நடவடிக்கையாகும். பெட்கள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்ற அச்சத்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் தளர்வுக்கு பிறகு மக்களை கண்காணிப்பது பெரிய சவாலாக மாறியுள்ளதுதான் இதற்கு காரணம். "மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம், எனவே, நாங்கள் தயாராக இருக்க விரும்புகிறோம், " என்கிறார் அமைச்சர் சுதாகர்.