பெங்களூருவில் 25வது தொழில்நுட்ப மாநாடு.. உரையாற்றும் பிரான்ஸ் அதிபர்! இன்று தொடங்கி வைக்கிறார் மோடி
பெங்களூரு: இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்ப தலைநகரம் என போற்றப்படும் பெங்களூருவில் இன்று நடைபெறும் 25 வது தொழில்நுட்ப உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
கர்நாடக அரசு மற்றும் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா இணைந்து 25 ஆண்டுகளாக பெங்களூரு நகரில் தொழில்நுட்ப மாநாட்டை நடத்தி வருகின்றன.
அந்த வகையில் இன்று 25 வது தொழில்நுட்ப உச்சி மாநாடு தொடங்குகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த தொழில்நுட்ப மாநாடு நவம்பர் 18 ஆம் தேதி நிறைவடைகிறது.
பிரதமர் நரேந்திர மோடி
பெங்களூரு அரண்மனை வளாகத்தில் இந்த தொழில்நுட்ப மாநாடு நடைபெற இருக்கிறது. ஜி20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசியாவுக்கு சென்று இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி வாயிலாக இந்த நிகழ்வை தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் இந்த விழாவில் அவர் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
பிரான்ஸ் அதிபர்
அதேபோல் இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்று உள்ள பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் இந்த நிகழ்வில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அமெரிக்கா, ஐக்கிய அரசு அமீரகம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பிரமுகர்கள் இதில் பங்கேற்க உள்ளார்கள்.
நினைவு சின்னம்
பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் 25 வது ஆண்டை ஒட்டி நினைவுச் சின்னம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதனை கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திறந்து வைக்க உள்ளார். இந்த மாநாட்டு நிகழ்வில் பெங்களூருவில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறையை சேர்ந்த 35 நிறுவனங்கள் கவுரவிக்கப்பட உள்ளன.
விரிவாக்க முயற்சி
இதுகுறித்து கர்நாடகாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா, "கர்நாடகாவில் நடைபெற்று வரும் இந்த தொழில்நுட்ப உச்சி மாநாட்டை, சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் டாவோஸ் பொருளாதார மாநாட்டை போன்று பெரிதாக்குவோம். அதன் மாதிரியை நாம் பின்பற்ற உள்ளோம்." என்றார்.