ரிமோட் கண்ட்ரோலாக இருப்பேனா?.. அதில் அவமானம் எதுவும் கிடையாதே.. மல்லிகார்ஜூன கார்கே பரபர பேட்டி
பெங்களூர்: 20 ஆண்டுகளாக கட்சிக்காக பாடுபட்டு இருக்கும் சோனியா காந்தி அவர்களின் ஆலோசனை கட்சிக்கு நன்மை தான் அளிக்கும் என்றும் அவர்களின் ஆலோசனையை பெறுவது எனது கடமை எனவும் இதில் அவமானம் எதுவும் இல்லை என்று மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார்.
இதையடுத்து கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சிக்கு இன்னமும் முழு நேர தலைவர் நியமிக்கப்பட வில்லை.
“கலவரம்”.. ஆர்எஸ்எஸ், பாஜகவின் கொள்கையே அதான்! தேச துரோகம் செய்றாங்க - விளாசிய ராகுல் காந்தி
தலைவர் பதவிக்கு தேர்தல்
ஒருபக்கம் காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. மற்றொரு பக்கம் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் சிலர் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் சோர்வு ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் வகையில், தலைவர் பதவிக்கு தேர்தலை கட்சித் தலைமை அறிவித்தது. இந்த தேர்தலில் காந்தி குடும்பத்தினர் யாரும் போட்டியிடக் கூடாது என ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறிவிட்டார்.
மல்லிகார்ஜூன கார்கே - மற்றும் சசி தரூர்
இதனால், தலைவர் பதவிக்கான போட்டியில் தற்போது மல்லிகார்ஜூன கார்கே - மற்றும் சசி தரூர் உள்ளனர். 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த தேர்தல் கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யாரும் கிடையது என்று கட்சித்தலைமை திட்டவட்டமாக கூறிவிட்டது. ஆனாலும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கே பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு இருப்பது அப்பட்டமாக கணிக்கும் வகையிலேயே உள்ளது.
நாளை தேர்தல்
கட்சியின் தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்குகள் வருகிற 19 ஆம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் நாட்டின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்பது அன்றைய தினம் தெரிந்து விடும். நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு மல்லிகார்ஜூன கார்கே பேட்டி அளித்தார்.
பாஜகவின் செயல்
அப்போது அவரிடம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர்கள் காந்தி குடும்பத்தின் ரிமோட் கண்ட்ரோலாக மட்டுமே இருப்பர் என்ற விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிது மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:- சொல்வதற்கு எதுவுமே இல்லாததால் இது போன்ற விஷயங்களை அவர்கள் கூறி வருகின்றனர். பாஜக இத்தகைய பிரசாரத்தில் ஈடுபட்டது, இதை பிறரும் பின்பற்றுகின்றனர்.
கட்சிக்கு நன்மை அளிக்கும்
20 ஆண்டுகளாக இந்தக் கட்சிக்காக சோனியா காந்தி பாடுபட்டு இருக்கிறார். ராகுல் காந்தியும் தலைவராக இருந்து இருக்கிறார். இந்தக் கட்சிக்காக போராடி கட்சியை அவர்கள் வலுப்படுத்தியிருக்கின்றனர். சில தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் மட்டும் அவர்களுக்கு எதிராக பேசுவது சரியாக இருக்காது. எனவே அவர்களின் (காந்தி குடும்பத்தினர்) ஆலோசனை கட்சிக்கு நன்மை அளிக்கும்.
ஆலோசனை பெறுவதுதான் எனது கடமை
ஆகவே, நான் நிச்சயமாக அவர்களின் ஆலோசனையை பெறுவேன். இதில் அவமானம் எதுவும் இல்லை. உங்கள் (ஊடகங்கள்) ஆலோசனையில் கூட நன்மை இருந்தால் அதை கூட நான் ஏற்றுக்கொள்வேன். அவர்கள் இந்தக் கட்சிக்காக உழைத்துள்ளனர். எனவே, அவர்களிடம் ஆலோசனை பெறுவதுதான் எனது கடமை'' என்றார்.