நல்ல செய்தி... வங்கியில் பணமெடுக்க உச்சவரம்பு நீக்கம் - விரைவில் அறிவிப்பு!
வங்கிகளில் பணமெடுப்பதற்கான உச்சவரம்பு இனி இருக்காது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரிசர்வ் வங்கி படிப்படியாக பணம் எடுக்கும் வரம்பை உயர்த்தும் என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகு
டெல்லி: கறுப்பு பணம், கள்ள பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முதல் உயர் மதிப்புடைய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் மீது அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி நவம்பர் 8 நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தார். இதையடுத்து நாடு முழுவதும் கடும் பணத் தட்டுப்பாடு உருவானது. இதனால் வங்கிகளில் பணமெடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அலைமோதும் மக்கள்
புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. ஏடிஎம்களில் 2000 மட்டுமே எடுக்க முடிந்தது. பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது. எனினும் 75 நாட்களுக்கு மேலாகியும் இன்னமும் பலர் பழைய நோட்டுக்களை மாற்ற முடியாமல் ரிசர்வ் வங்கியின் கதவுகளை தட்டிக்கொண்டிருக்கின்றனர்.
உச்சவரம்பு
வங்கிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.2000, ரூ.4500, ரூ.10000 பணமெடுக்கலாம் என்று படிப்படியாக வரம்பு உயர்த்தப்பட்டது. இதேபோல் வார உச்சவரம்பும் நிர்ணயிக்கப்பட்டது. அதில் திருமணம் நிகழ்விற்கு விலக்கு அளிக்கப்பட்டு, தனி வரம்பு அறிவிக்கப்பட்டது. எனினும் வங்கிகள், ஏடிஎம்களில் போதிய பண இருப்பு இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
பிப்ரவரியில் சீரடையும்
பிப்ரவரி மாத இறுதிக்குள் 78% முதல் 88% பணம் புழக்கத்துக்கு வந்துவிடும் என எஸ்பிஐ நடத்திய கணிப்பில் தெரிய வந்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் நிலைமை சீரடைந்து விடும் என்று கணித்துள்ளது.
உர்ஜித் பட்டேல்
நாடாளுமன்றத் தின் நிதித்துறைக்கான நிலைக்குழுவின் முன் பதிலளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், எவ்வளவு காலத்தில் நிலைமை சீரடையும் என்ற தகவலை உறுதிபட தெரிவிக்கவில்லை. ஆனாலும் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட தொகையில் 60% அல்லது ரூ.9.2 லட்சம் கோடி தொகை புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உச்சவரம்பு நீக்கம்
இந்நிலையில் இனி வங்கிகளில் பணமெடுக்க உச்சவரம்பு இல்லை என்று விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான அறிவிப்பை இம்மாத இறுதியில் ரிசர்வ் வங்கி வெளியிடும் என்றும், பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
செயல்படாத ஏடிஎம்கள்
தற்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான அளவு ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் வாராந்திர அளவு ரூ. 24 ஆயிரம் என்ற நிலையில் எவ்வித மாற்றமும் செய்யப்டபவில்லை. நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வாரத்துக்கு ரூ.1 லட்சம் வரை எடுக்க அனுமதிக்கப் பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ முற்றிலுமாக ரிசர்வ் வங்கி தளர்த்திவிடும் என்று எதிர்பார்ப்பதாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
என்னதான் உச்சவரம்பு உயர்த்தப்பட்டாலும் இன்னமும் பெரும்பாலான ஏடிஎம்கள் செயல்படாத நிலையிலேயே இருக்கின்றன என்பதே நிதர்சனம்.